2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது? – பாராவின் சாட்சி

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுத்த முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

முன்னுரை:

தற்போதைய பதிவில், பா. ராகவன் அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 17வது அத்தியாயத்திலிருந்து இரண்டு விவரங்களை ஆய்வு செய்யப்போகிறோம். முதலாவதாக, ஹதீஸ்கள் பற்றி அவர் எழுதிய வரிகள் முஸ்லிம்களுக்கு வருத்தம் உண்டாக்கும் என்பதை அவருக்கு தெரிவிக்கவேண்டும். இரண்டாவதாக, இஸ்லாமின் இரண்டாம் கலிஃபா உமர் அவர்களின் ஆட்சியின் போது, இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது என்று பாரா அவர்கள் எழுதியுள்ளதை ஆய்வு செய்வோம். 

1) ஹதீஸ்கள் முஹம்மதுவுடையதா?

பாரா அவர்கள் கீழ்கண்ட விதமாக ஹதிஸ்கள் பற்றி எழுதியுள்ளார்கள்.

17) உமரின் மனமாற்றம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 17

ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.), 

பாரா அவர்களின் படி, குர்-ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது, ஹதீஸ் என்பது இறைவனால் அருளப்படவில்லை, அது முஹம்மதுவுடையது.  அதாவது முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற  சம்பவங்கள் மற்றும் போதனைகள் அடங்கியது ஹதீஸ்கள் என்று குறிப்பிடுகிறார்.

இங்கு பாரா அவர்களுக்கும் இஸ்லாம் பற்றி எழுதும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமின் படி ஹதீஸ்கள் கூட அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹியே ஆகும். ஹதீஸ்களில் முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களைக் காணலாம் என்பது உண்மையே! ஆனால், அவ்விரண்டும் முஹம்மதுவின் சொந்த செயல்பாடுகள் அல்ல, அவர் அல்லாஹ்வின் வஹியின்படியே பேசினார், அவரது செயல்களும் அல்லாஹ்வின் கட்டளையின்படியே அமைந்தது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இரண்டு வகையான வஹிக்கள்:

முஸ்லிம்களின் படி வஹிகள் (வெளிப்பாடுகள்) இரண்டு வகைப்படும். முதலாவது வகை வஹி, ஜிப்ரீல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியது, அதனை குர்-ஆன் என்று அழைப்பார்கள். இரண்டாவது வஹி, பல சந்தர்பங்களில் தேவைக்கு ஏற்ப, அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹியை கொடுத்துள்ளான். அது எப்படி கொடுத்தான் என்று முஹம்மதுவிற்கு மட்டுமே தெரியும். முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் கேள்விகள் சந்தேகங்கள் கேட்கும் போது, முஹம்மது பதில் கொடுப்பார். இந்த பதில்கள் கூட, அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். 

ஹதீஸ்கள் முஹம்மதுவுடையது என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் அதனை பின்பற்றலாம் அல்லது விட்டுவிடலாம். ஆனால், ஹதிஸ்கள் பற்றிய  முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது. குர்-ஆனும் வஹி தான், ஹதீஸ்களும் வஹி தான். எனவே, இரண்டையும் பின்பற்றவேண்டும்.  

முஸ்லிம்களிடையே இந்த ஹதீஸ் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம்கள் பிளவுப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல ஆயிர ஹதீஸ்கள் இருப்பதினால், சில முஸ்லிம் அறிஞர்கள் (பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றவர்கள்) சில ஹதீஸ்களை மறுக்கும் போது, மற்ற முஸ்லிம்கள் இவரை எதிர்க்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் காஃபிர் (முஸ்லிமல்லாதவன்) என்று சொல்லி திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, பாரா அவர்களே, இனி முஸ்லிம்கள் பற்றி எழுதும் போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கள். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி உயர்த்தி எழுதிவிட்டீர்கள், எனவே பிழைத்துவிட்டீர்கள், உண்மையை நீங்கள் எழுதியிருந்தால் உங்களை அவர்கள் உங்கள் தொடர் வந்துக்கொண்டு இருக்கும் போதே உயர்த்திவிட்டு இருந்திருப்பார்கள். இனி எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2) அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது?

திரு பாரா அவர்களே, இதே 17வது அத்தியாயத்தில், கீழ்கண்டவிதமாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

அ) அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது

பாரா அவர்களே, உங்களுடைய மேற்கண்ட பத்தியின் முதல் வரியை முதலாவது கவனிப்போம்.  உமரின் காலத்தில் அரேபியாவிற்கு வெளியே “இஸ்லாம்  வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது” என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது  - இதன் அர்த்தமென்ன?

வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும், இந்த நான்கு வார்த்தைகள் அடங்கிய வரியில் இரண்டு முக்கியமான விவரங்கள் அடங்கியுள்ளது.

கேள்வி 1: எது வேகமாக பரவியது?

பதில் 1: இஸ்லாம் வேகமாக பரவியது

கேள்வி 2: எங்கே வேகமாக இஸ்லாம் பரவியது?

பதில் 2: அரேபியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில்

இப்போது தான் முக்கியமான கேள்விக்கு வருகிறோம்:

கேள்வி 3: எப்படி இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவத்தொடங்கியது?

இந்த கேள்விக்கு பாரா அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும், அல்லது முஸ்லிம்கள் அவருக்கு பதில் சொல்ல உதவலாம். வாசகர்களுக்கு உதவும் என்பதற்காக நான் சில ஆப்ஷன்களை தருகிறேன், அதில் எது சரியாக இருக்கும் என்று நீங்கள் தெரிவு செய்யுங்கள்.

பதில் 3: 

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்:

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள்,  பல முஸ்லிம்களை அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கு அனுப்பி, புத்த பிட்சுக்களைப்போல,  கிறிஸ்தவ மிஷனரிகளைப் போல, இஸ்லாமை அமைதியான முறையில் பரப்பும்படி அனுப்பினார். இதன் மூலமாக அந்நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவியது.

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளில் பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களை, பள்ளிக்கூடங்களை அதாவது மதரஸாக்களை அமைத்து, இஸ்லாமை கற்றுக் கொடுத்தார். இஸ்லாமின் கோட்பாடுகளில், குர்-ஆனில் மயங்கிய அந்நாடுகள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது.

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்

கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு சுற்றியிருந்த நாடுகளுக்கு கடிதங்கள் எழுதி, எங்கள் நாட்டுக்கு (மதினாவிற்கு) எங்கள் இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள உங்கள் அறிஞர்களை அனுப்புங்கள். அவர்கள் இஸ்லாமை கற்றுக்கொண்டு, உங்களுக்கு அதனை விளக்குவார்கள். நீங்கள் விரும்பினால் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளலாம் என்று அன்பான அழைப்புவிடுத்தார். இப்படி வந்த அறிஞர்கள் இஸ்லாமினால் ஈர்க்கப்பட்டு தங்கள் நாடுகளுக்குச் சென்று இஸ்லாமை பரப்பினார்கள். இதனால் தான் அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் வெகு வேகமாக பரவியது.

பாரா அவர்களுக்கு கேள்விகள்:

அன்பான பாரா அவர்களே, உமர் காலத்திலே அரேபியாவிற்கு வெளியே  “இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது” என்று எழுதினீர்களே, உங்கள் ஆராய்ச்சியில் நீங்கள் கண்டுபிடித்த உண்மை என்ன? நான் கொடுத்த மூன்று தெரிவுகளில் நீங்கள் எதனை தெரிவு செய்யப்போகிறீர்கள்?

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்?

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்?

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்?

என்ன! வாசகர்களுக்கு சிரிப்பு வருகிறதா?

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள், மேலும் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவை பார்த்தவர்கள், அவரை தொட்டவர்கள், அவரது போதனைகளை தங்கள் சுய காதுகளால் கேட்ட அவரது தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும்?

புத்தரின் சீடர்கள் இப்படித்தான் உலகமெல்லாம் சென்று புத்தரின் போதனைகளை பரப்பினார்கள். இயேசுவின் சீடர்கள் கூட இதே போலத்தான், உலகமெல்லாம் மிஷனரிகளாகச் சென்று, இயேசுவின் நற்செய்தியைப் பரப்பினார்கள். 

இயேசுவின் வழியில் தானும் வந்தேன் என்று பெருமைப்பட்டுக்கொண்ட முஹம்மதுவின் தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 

பாரா அவர்களே, உங்கள் வரியில் ‘இஸ்லாம்’ என்றால் என்ன?

நீங்கள் எழுதிய கீழ்கண்ட வரியில் “இஸ்லாம்” என்று எதைச் சொல்கிறீர்கள்?

பாரா அவர்கள் எழுதியது:

”உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது.”

இஸ்லாம் என்றால் --> குர்-ஆன் மற்றும் முஹம்மது காட்டிய ஆன்மீக போதனைகளை மக்கள் தங்கள் மனதளவில் ஏற்றுக்கொள்வதா?

அல்லது

இஸ்லாம் என்றால் --> மதினாவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாமிய தலைவர் மற்ற நாடுகளில் மீது போர் புரிந்து, நாடுகளை பிடித்து, அங்கு ஒரு முஸ்லிமை நாட்டு தலைவராக நியமித்து, அந்நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் ”உங்கள் மார்க்கங்களை பின்பற்றிக்கொண்டு ஜிஸ்யா வரி கட்டுகிறீர்களா? அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக மாறுகிறீர்களா?” என்று கேட்பதா?

பாரா அவர்களே, உங்கள் அகராதியில் மேற்கண்ட உம்முடைய தமிழ் வரியில், இஸ்லாம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனதளவில் இஸ்லாமா? அல்லது இஸ்லாமிய தலைவர் ஆட்சி செய்வதா?

இப்போது தான் நான்காவது ஆப்ஷன் வருகிறது…

Option D) போர் புரிந்து இஸ்லாமை பரப்புதல்

முஸ்லிம்கள் தலைவர்கள் போர் புரிந்து இஸ்லாமை பரப்பினார்களே தவிர, மக்களுக்கு ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுக்கொடுத்து பரப்பவில்லை. இதனை எப்படி பாரா அவர்கள் எழுதுகிறார் என்பதை கீழே படியுங்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

உமர் எப்படி ஜெருசலேமில் கால் எடுத்து வைத்தார்? யாராவது ஜெருசலேமிலிருந்து இவருக்கு அழைப்பு விடுத்தார்களா? அல்லது இவரது தாவா பணியாளர்கள் ஜெருசலேமில் ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுகொடுத்தார்களா?

இவர் படையெடுத்துச் சென்றார் (தன் தளபதிகளை அனுப்பினார்), இதர நாடுகளை பிடித்தார். இப்படித்தான் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது. அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் பரவியது என்றுச் சொல்லாமல்,  இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றிக்கொண்டு இருந்த உமர், இதர நாடுகளை பிடித்தார் என்றுச் சொல்லவேண்டும். இஸ்லாமுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது? நாடுகள் மீது ஆசை கொண்டு, மதினாவில் சும்மா இருக்காமல், நாடுகளை பிடித்து, மக்களைக் கொன்று,  அடிமைகளாக பிடித்துக்கொண்டு, அவர்களை விற்று, அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டு இருந்தார்கள்.  இங்கு இஸ்லாமின் ஆன்மீகம் எங்கே இருக்கிறது? வெறும் ஆண்மீகம் தான் இருந்தது (நான் எழுத்துப்பிழை செய்யவில்லை).

இதனை யாராவது இல்லையென்று சொல்லமுடியுமா? பாரா அவர்கள் நிச்சயமாக இதனை மறுக்கமுடியாது, ஏனென்றால், அவரது வரிகளைத் தானே நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

முடிவுரை:

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பது முஸ்லிம்களின் வாதம். இதே வாதத்தை பாரா போன்ற எழுத்தாளர்கள் கூட கடன் வாங்கியாவது எழுதிவிடுகிறார்கள். ஆனால், உண்மையை மறைக்கமுடியுமா? ஆங்காங்கே சில உண்மை முத்துக்கள் எழுத்தாளர்களுக்கே தெரியாமல்  தெறித்துவிடுகின்றன. அப்படி தெறிக்கப்பட்ட ஒரு வரியைத் தான் நாம் இந்த பதிவில் கண்டோம்.

அடுத்த பதிவில் இதே 17வது அத்தியாயத்தில், பாரா அவர்கள்  “கலிஃபா உமர் அவர்களிடம், அப்போது ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர் மனமுவந்து நகர சாவியை கொடுத்தார்” எழுதிய வரிகளை சாவி கொண்டு திறந்து ஆய்வு செய்யப்போகிறோம்.  இவரது இவ்வரிகளை படிக்கும் போது, ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்  ஏழாம் நூற்றாண்டில், உமருக்கு ஒரு கடிதம் எழுதி, ”வாங்கய்யா பழகலாம்” என்று சொன்னது போலவும், உமர் ஜெருசலேமுக்குச் சென்ற போது, ஆர்ச் பிஷம் நகரத்தின் சாவியை (முழு ஆட்சி செய்யும் பொறுப்பை) எடுத்து இவரிடம் சிரித்துக்கொண்டே கொடுத்தது மாதிரியும் தெரிகிறது. இது உண்மையா? வாங்க அடுத்த பதிவில் ஆய்வு செய்யலாம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்