ரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு,

உன் கடிதம் கண்டேன், மகிழ்ச்சி அடைந்தேன்.  இத்தனை நாட்களுக்கு பிறகு இன்று நீ எழுதிய கடிதத்தில் தான் நீ,  நம் குடும்ப நபர்களை ஞாபகப்படுத்தியுள்ளாய். கர்த்தருடைய கிருபையால் அம்மா, அப்பா தங்கச்சி, அண்ணி எல்லாரும் சுகமாக இருக்கிறார்கள். உன்னைப் பற்றி அதிகமாக நாங்கள் அடிக்கடி பேசுவோம். 

முக்கியமாக உன் கடிதத்தில் ஒரு விசித்திர கேள்வியை கேட்டுள்ளாய், அதாவது:

"நீங்கள் பைபிளை படித்துக்கொண்டும் அதே நேரத்தில் குர்-ஆனையும் படித்துக்கொண்டும் ஏன் ஒரு முஸ்லிமாக வாழக்கூடாது? தோராவையும், சங்கீதங்களையும், இன்ஜிலையும் அல்லாஹ் தான் அனுப்பியதாக குர்-ஆன் சொல்கிறது. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது, அதே போல முஸ்லிம்களும் நம்புகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் குர்-ஆன் மற்றும் பைபிளுக்கும் இடையே வித்தியாசத்தை பெரிது படுத்தி குர்-ஆன் சொல்வதை ஏற்க மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டுள்ளாய்.

தம்பி உன்னுடைய கேள்வி மிகவும் ஆழமானதாக உள்ளது, ஒரு கிறிஸ்தவன் பைபிளை நம்பிக்கொண்டும், அதே நேரத்தில் குர்-ஆனையும் நம்பமுடியாது. ஏன் ஒரு கிறிஸ்தவன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் பின் பற்ற முடியாது என்பதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்களை இப்போதைக்கு நான் உன் முன் வைக்கிறேன். இந்த மூன்றும் தடைக்கற்களாக காணப்படுகிறது, நீ ஏற்றுக்கொண்டாலும் சரி,  ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இது தான் கிறிஸ்தவனின் கண்ணோட்டத்தில் உண்மை.

1) 'அல்லாஹ்' என்ற ஒரு தடைக்கல்:

பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும்? அவனது இலக்கணங்கள் என்ன என்பது தெளிவாக புரிந்துவிடும். ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, தேவன் ஒரு பரிசுத்த நீதிபதியாக அவனுக்கு காணப்படுகிறார், குற்றம் செய்பவர்களை தேவன் தண்டிக்கும் போது அவரது பரிசுத்தமும் நீதியும் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவு பற்றி படிக்கும் போது நீதியுள்ள தேவனாக அவர் செயல்படுகிறார்.  அதே தேவன் நினிவே பட்டணத்தை அழிக்க யோனாவை அனுப்பிய நிகழ்ச்சியின் கடைசியில் பார்க்கும்போது, ஒரு அன்பான கரிசனையுள்ள தேவனாக காணப்படுகிறார். தன்னுடைய ஊழியக்காரனாகிய யோனாவிடம் நினிவே மக்களைப் பற்றி தேவன் பேசுகின்ற வார்த்தைகள் மக்களின் மனதில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது. இப்படி பழைய ஏற்பாட்டில் தேவன் செயல்பட்ட விதம் மிகவும் ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் ஒரு இறைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியாகவும் காணப்படுகிறது. 

மேலும், இஸ்ரவேல் ஜனங்களை தண்டிப்பதிலும், அதே நேரத்தில் அவர்களை ஆறுதல் படுத்துவதிலும், தேவன் எப்போதும் முன்வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறார்.  ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்க படிக்க ஆவியாக இருக்கும் தேவனை தன்  ஆன்மீக கண்களால் காண்கின்றான், பேசுகின்றான், அவரோடு உறவாடுகின்றான், கிட்டத்தட்ட தேவன் அவனது இருதயத்தில் மறக்க முடியாத ஒரு நபராக மாறிவிடுகின்றார். 

நான் உன்னை ஆசீர்வதிப்பேன், ஏந்துவேன் சுமப்பேன், துன்மார்க்கனின் மரணம் எனக்கு பிரியமானதாக இருக்காது, அவன் மனந்திரும்பவே நான் விரும்புகிறேன் போன்ற அவரது வசனங்கள் மூலமாக நம் யெகோவா தேவன் மனிதனை தன் அன்பின் கயிறுகளால் காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார். இவரை விட்டு ஒருவன் வெளியே வரவேண்டுமென்றால் அது கடினமான ஒன்றாக இருக்கிறது.

இப்படிப்பட்ட தேவனை ருசி பார்த்துவிட்டு, "அல்லாஹ்" என்ற இஸ்லாமிய இறைவனைப் பற்றி அறியும் போது, அவரது குணங்களையும் செயல்களையும் நாம் குர்-ஆனில் ஹதீஸ்களில் படிக்கும் போது, நம் தேவன் நம் மனதில் உருவாக்கும் தாக்கம் போல அது இல்லாமல் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஏதோ அல்லாஹ் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்துக்கொண்டு நம்மிடம் பேசுவதாகவும், கட்டளைகளை கொடுப்பதாகவும் உணருகிறோம்.  மேலும் ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்யும் சேவகனைப்போல கைகளை கட்டிக்கொண்டு, அதிகாரி எப்போது பேசுவார், கட்டளைகளை கொடுப்பார், அதனை எப்படி நாம் செயல்படுத்தலாம் என்பது போல ஒரு உணர்வோடு இருப்பதாக மனிதன் உணருகிறான்.

எனவே, ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முதல் தடைக்கல்லாக இருப்பது, இஸ்லாமின் மூல ஆதாரமாம் அல்லாஹ் தான். ஒரு நல்ல கிறிஸ்தவன், தேவனை தன் முழு இருதயத்தோடும், பலத்தோடும் அன்புகூருகிற கிறிஸ்தவன் எக்காலத்திலும், அல்லாஹ்வினால் தாக்கப்படமாட்டான்.  வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் காணப்படும் அல்லாஹ் ஒரு கிறிஸ்தவனை ஈர்க்க போதுமானவராக இல்லை.

2) 'குர்-ஆன்' என்ற ஒரு தடைக்கல்:

தம்பி இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவன் ஏன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் விசுவாசிக்கமாட்டான் என்று கேட்டால்,  அவன் 'குர்-ஆனை' பைபிளின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். 

பைபிளின்  வார்த்தைகளை வாசித்து, சுவாசித்து, ருசி பார்த்து, அதன் மூலமாக தேவனையும், அவரது அன்பையும் கிறிஸ்தவன் அறிந்துக்கொள்கிறான்.  அதே போல குர்-ஆனும் அவனுக்கு இறைவனின் அன்பை போதிக்கின்றதா? என்று அவன் சோதித்துப் பார்க்கும் போது, அது தோல்வி அடைவதை காண்கின்றான்.   ஏதோ கண்களை மூடி, காட்டில் விட்ட கதைபோல மனிதனுக்கு குர்-ஆன் குழப்பமாக காணப்படுகிறது. குர்-ஆன் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறதை காண்கிறான், மக்களை பயப்படவைத்து தன் வேலைகளை செய்துக்கொள்ளும் ஒரு சர்வாதிகாரியின் சட்டபுத்தகமாக குர்-ஆன் காணப்படுகிறது.  பைபிளின் மென்மை, குர்-ஆனில் காணமுடியாது. கர்த்தர் அடித்தாலும், அவரே அணைக்கிறார்,  கர்த்தர் காயப்படுத்தினாலும் அவரே காயங்கட்டுகிறார்.  மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதற்காக கர்த்தர் அடிக்கிறார், காயப்படுத்துகிறார் என்பதையும் பைபிள் விவரிக்கும் போது, மனிதனின் சொர்ந்து போன வாழ்வு தழைக்கிறது, தான் செய்த குற்றத்தை உணர்ந்து மனிதன் திருந்திவிடுகிறான், இன்னும் தேவன் மீது அவனுக்கு அன்பு அதிகமாகிறது. "உன்னைப் போல உன் அயலானையும் நேசி" என்ற ஐந்து வார்த்தைகளில் மனிதனின் ஒட்டு மொத்த சுயத்தை பைபிள் அழித்துவிடுகிறது.

தம்பி, குர்-ஆன் மனிதனை நல்வழிப்படுத்த முடியாது. இறைவனோடு மனிதனை ஒன்று சேர்ப்பதை விட, குர்-ஆன் இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரத்தை அதிகப்படுத்துகிறது. ஒன்று சொல்லட்டுமா, மனிதன் எந்த அளவுக்கு அதிகமாக தன் இறைவனின் அன்பை விட்டு தூரமாக செல்கிறானோ, அவன் அவ்வளவு  அதிகமாக இதர மனிதர்களை வெறுக்கவும், அடிக்கவும் ஆரம்பிப்பான். இறைவன் அவனது உள்ளத்தில் தன் அன்பை பொழியாமல் போனதால், அந்த மனிதன் தன் சக மனிதன் மீது அன்பை பொழிய மாட்டான். சிந்தித்துப்பார், ஏன் இஸ்லாமியர்களின் மத்தியில் மட்டும் அதிகமாக தீவிரவாதம், வன்முறை காணப்படுகிறது என்று எண்ணிப்பார்? இதை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால், உலகத்தில் நடக்கும் செயல்களை சோதித்துப் பார்த்தால் உனக்கே உண்மை புரியும்.

ஆக,  பைபிளை பின் பற்றும் ஒரு மனிதன் நிச்சயமாக குர்-ஆனின் மகுடி இசைக்கு முன்பாக மயங்கமாட்டான். அவன் மீது எப்படிப்பட்ட சுனாமி வந்தாலும் அவன் அசையாமல் நிலை நிற்பான்.

3) 'முஹம்மது' என்ற தடைக்கல்:

ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க கடைசி காரணமாக, அதன் ஸ்தாபகர் காணப்படுகிறார். பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு முன்பாக அனேக மனிதர்கள், பெண்கள் தலைவர்கள், தலைவிகள், நல்ல கணவன்மார்கள், மனைவிமார்கள், நீதியை முழு மூச்சாக பின்பற்றினவர்கள், நல்ல மகன்கள், மகள்கள், தீய மகன்கள் மகள்கள், ஒரு சில காசுக்காக பெரிய குற்றங்களை புரிந்தவர்கள், கோழைகள், வீரர்கள் என்று அனேக மனிதர்களின் சரிதை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனில் கணப்படும் நல்ல மற்றும் தீய செயல்கள் என்னென்ன? என்று கிறிஸ்தவ திருச்சபையின் போதகர்கள் அழகாக எடுத்துக் கூறுகிறார்கள். ஆதாம் முதற்கொண்டு, 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் வரைக்கும் ஒவ்வொரு நபரின் சரிதையும் கிறிஸ்தவனுக்கு தெரியவருகிறது.

இவைகளையெல்லாம் அறிந்த ஒரு கிறிஸ்தவன், முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமியர்கள் கூறும் போது மிகவும் ஆச்சரியப்படுகின்றான். இவ்வளவு நல்ல மனிதனாக இவர் இருக்கிறாரே, இப்படிப்பட்டவர்களை நாம் பைபிளிலும் அனேகரை காணவில்லையே என்று நினைத்துக்கொள்வான். ஆனால், இஸ்லாமியர்கள் மறைத்த முஹம்மதுவின் இதர குணங்களை அவன் அறியும் போது, இவ்வளவு தானா? இவர் ஒன்றும் அவ்வளவு வித்தியாசமானவராக காணப்படவில்லையே என்று ஒரு நொடியில் முஹம்மதுவை புறக்கணித்துவிடுகிறான்.

பைபிளில் காணப்படும் நபர்களைப்போல இவரும் நன்மைகள் தீமைகள் புரியும் ஒரு சாதாரண மனிதர் தான் என்று தீர்ப்பு வழங்கி இவரை ஒரு நபியாகவும், ஏற்க மறுத்துவிடுகிறான். மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், முஹம்மது செய்த குற்றங்களை / தவறுகளை  இஸ்லாமியர்கள் நியாயப்படுத்தி "அவைகள் தவறுகளே இல்லை" என்று அடித்துச் சொல்லும் போது சராசரி மனிதனுக்கு கோபம் வருகிறது. கண்களுக்கு எதிராக தெளிவாக தெரியும் ஒரு விஷயத்தை இப்படி அப்பட்டமாக முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களே என்று எண்ணி, இஸ்லாம் பக்கமும், முஹம்மது பக்கமும் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.

கடைசியாக இயேசுவோடு முஹம்மதுவை நம்மை அறியாமலே நாம் ஒப்பிட்டு பார்த்துவிடுகிறோம். இந்த பரிட்சையில் முஹம்மது தோல்வி அடைவதினால், முழு இஸ்லாமையும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் புறக்கணித்துவிடுகிறோம்.

தம்பி,  இதுவரையில் கூறிய "அல்லாஹ்", "குர்-ஆன்" மற்றும் "முஹம்மது" என்ற மூன்று காரணங்கள் தன் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க தடைக்கற்களாக உள்ளது.  ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மூன்று தான் இஸ்லாமின் அஸ்திபாரமாக இருக்கிறது. நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறிந்த ஒரு மனிதன், இஸ்லாமை முழுவதும் அறிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமின் பக்கம் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.

எனவே, உன்னுடைய அழைப்பிற்கு நான் மறுப்பு தெரிவித்ததற்காக, வருந்துகிறேன், ஆனாலும், மனிதனை திருப்தி படுத்துவதைக் காட்டிலும், தேவனை திருப்திபடுத்துவதே சிறந்ததல்லவா?

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், எனக்கு எழுத தயங்காதே.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்