2015 ரமளான் கடிதம் 10

சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

ரமளான் மாத தொடர் கடிதங்களை இங்கு சொடுக்கி படிக்கலாம். 

[நேற்று எழுதிய கடிதத்தை படித்தவுடன், உமரின் தம்பி தொலைபேசியில் அழைத்து உமருடன் பேசுகிறார். இவ்வுரையாடலில் முஹம்மதுவிற்கு பிறகு சஹாபாக்களின் நிலை, இயேசுவிற்கு பிறகு சீடர்களின் நிலை ஒப்பிடப்படுகின்றது. இவர்களில் யார் வழிகாட்டுதல் இல்லாத அனாதைகள்? தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படிக்கவும். உமரின் மொபைள் அலறுகிறது, உங்களுக்கு பிடித்தமான ட்யூனை நீங்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்….]

உமர்: ஹலோ, தம்பி

தம்பி: ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்.

உமர்: வாஅலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: இது நலம் விசாரிக்கின்ற நேரமல்ல, அதை அப்புறம் விசாரித்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் கடிதத்தை படித்தவுடன், உங்களுக்கு போன் செய்து, நச்சென்று நாலு கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்து போன் செய்தேன். உங்களுக்கு இப்போது நேரமிருக்கிறதா?

உமர்: நீ ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல தெரிகிறது. கோபத்தில் எதையும் பேசவேண்டாம், நாம் பிறகு பேசலாம்.

தம்பி: இல்லை.. இல்லை.. நான் கோபமாக இல்லை. இப்போதே பேசனும்.

உமர்: சரி, உன் விருப்பம். 

தம்பி: நேற்று நீங்க அனுப்பிய கடிதத்தில் அனேக தவறான விவரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒன்று, “சஹாபாக்கள் அனாதைகளாக விடப்பட்டார்கள்” என்றுச் சொன்னது தான்.

உமர்: உண்மை தானே! சஹாபாக்கள் அனாதைகளாகவும், சரியான வழிநடத்துதலும், உதவியும் இல்லாமலும் தங்கள்  மனம் போன போக்கில் நடந்துக்கொண்டார்கள் இல்லையா?

தம்பி: நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? எங்க இறைத்தூதர் சஹாபாக்களோடு நிரந்தரமாக வாழ்ந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கிறீர்களா? இது சாத்தியமான ஒன்றா? மனிதனாக பிறந்தவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டுமல்லவா? இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை?

உமர்: முஹம்மது பல நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

தம்பி: இப்படி இல்லையென்றால், உங்க வரிகளுக்கு வேறு என்ன அர்த்தமாம்?

உமர்: சஹாபாக்கள் அனாதைகள் என்றுச் சொன்னது, மனித வடிவில் முஹம்மது அவர்களோடு இருந்திருக்கவேண்டும் என்று  அர்த்தமில்லை.  இது சாத்தியமும் இல்லை என்று எனக்குத் தெரியும்.

முஹம்மதுவிற்கு பிறகு அவர்களை நேர் வழியில் நடத்த எந்த ஒரு ஏற்பாட்டையும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ செய்யவில்லையே! என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

தம்பி: என்ன ஏற்பாடு தேவைப்படுகின்றது என்று நீங்க நினைக்கிறீங்க? சஹாபாக்கள் என்ன  சின்ன பிள்ளைகளா? அவர்களை கண்காணிக்க கார்டியன் (Guardian) வைத்துப்போக!  அவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள், உலகத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் நன்கு அறிந்தவர்கள். 

இது மட்டுமல்ல, அவர்களை நேர் வழியில் நடத்த அவர்களிடம் குர்-ஆனும், சுன்னாவும் இருந்தன. மேலும் அவர்கள் முஹம்மதுவை நேரடியாக பார்த்த முதல் தர சாட்சிகளாக இருந்தார்கள். 

உமர்: என் கேள்வியும் இதைப் பற்றியது தான். குர்-ஆனும் சுன்னாவும் சஹாபாக்களை நேர்வழியில் நடத்தியிருந்தால், இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், எதிரிகளைப்போல கருதிக்கொண்டும் இருந்திருப்பார்களா?

முஹம்மது உயிரோடு இருந்தபோது, காணப்பட்ட அந்த ஐக்கியம் அவர் மரித்தவுடன் ஏன் காணாமல் போய்விட்டது?

தம்பி: அப்படி என்ன செய்துவிட்டார்கள் சஹாபாக்கள்?

உமர்: விடிய விடிய இராமாயணம் கேட்டு, சீதை இராமனுக்கு என்ன உறவு என்று கேட்டானாம் ஒருத்தன், அது போல இருக்கு உன் கேள்வி.

முதலாவதாக, முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமாவும், அலியும் சொத்துக்காக போட்ட சண்டையை என் கடிதங்களில் எழுதினேன்.

அண்ணன் எப்போ காலியாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதற்கு ஏற்றாற்போல, முஹம்மது மரித்தவுடன் அடுத்த தலைவர் யார் என்று முடிவு செய்ய முக்கியமானவர்களுக்கும் சொல்லாமல் கூட்டம் கூடிவிட்டார்கள் அன்ஸார்கள். அங்கு சென்ற அபூ பக்கரும், உமரும் தங்களுக்குத் தான் அந்த பதவி, முஹம்மது எங்களைத் தான் தலைவராக நியமிக்க விரும்பினார் என்றெல்லாம் சொல்லி சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். 

இதுவரை மேற்கண்ட இரண்டு விஷயங்களை மட்டுமே பார்த்துள்ளோம், இன்னும் அனேக விவரங்கள் பாக்கியுள்ளது. அவைகளை சொல்வதற்கு முன்பாகவே, ”சஹாபாக்கள் அப்படி என்ன செய்தார்கள்?” என்று நீ கேட்கிறாய்?  இது ஆரம்பம் தான் இன்னும் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது தம்பி. 

இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல

தம்பி: நீங்க என்ன சொல்லவருகிறீங்க என்று எனக்கு புரியலே! 23 ஆண்டுகள் இறைத்தூதர் ஊழியம் செய்தார், குர்-ஆனை கொடுத்தார், குர்-ஆனின் விளக்கமாக தானே வாழ்ந்துவிட்டுச் சென்றார். இத்தனை வழிகாட்டுதல் இருந்தும், சஹாபாக்களை அனாதைகள் என்றுச் சொல்ல என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்.  இயேசு மரித்த பிறகு அவர்களிடம் புதிய ஏற்பாடு இல்லை, குறைந்த பட்சம் நற்செய்தி நூல்களும் அவர்களிடம் இல்லை.  அவர்கள் மத்தியிலே இயேசு வாழ்ந்த 3.5 ஆண்டுகள் தான் இவர்களின் சொத்துக்களாக இருந்தது. ஆக, இஸ்லாமோடு ஒப்பிடும் போது:

  1. சஹாபாக்களிடம் --> குர்-ஆன் இருந்தது மற்றும் சுன்னா இருந்தது (23 ஆண்டுகால முஹம்மதுவின் வாழ்க்கை)
  2. அப்போஸ்தலர்களிடம் --> புதிய ஏற்பாடு இல்லை, நற்செய்தி நூல்கள் இல்லை, இயேசுவின் சுன்னா மட்டும் இருந்தது அதுவும் 3.5 ஆண்டுகள் மட்டும் தான்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல. 

இப்போது உங்களுக்கு சரியாக புரிந்திருக்குமே! நச்சென்று உச்சந்தலைக்கு காரம் ஏறியிருக்குமே!

உமர்: தம்பி, நீ முன்னேறி விட்டாய் என்று நினைக்கிறேன். லாஜிக்கை நல்லா பிடிக்கிறாயே!

தம்பி: உங்களிடம் பதில் இல்லையா?!? அதனால் தான் சொல்கிறேன், அதிகமாக இஸ்லாமோடு விளையாடாதீர்கள், ”மாட்டேன்” என்று அடம் பிடித்தால், இப்படி மூக்கு அறுக்கப்பட்டுப் போகவேண்டி வரும். இது எப்படி இருக்கு?

உமர்: நான் இன்னும் முடிக்கவில்லையே தம்பி. யாருடைய மூக்கு அறுக்கப்போகுது என்று கடைசியில் தானே தெரியும். என் தரப்பு வாதத்தை நான் வைக்கட்டும். தம்பி, இப்புடு சூடு!?! [தமிழே பாதி தான் வரும், இதில் தெலுங்கு வேறா…]

சஹாபாக்களை குர்-ஆனும், ஹதீஸ்களும் நேர் வழியில் நடத்தியிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டு, வசை மொழிகளை கூறிக்கொண்டு, அடித்துக் கொண்டு செத்து இருந்திருக்கமாட்டார்கள். இவர்களை குர்-ஆனும், சுன்னாவும் நேர் வழியில் நடத்தவில்லை என்பது தான் உண்மை.

இயேசுவின் சீடர்கள் அனாதைகளாக வாழவில்லை, அவர்கள் நேர் வழியில் நடத்தப்பட்டார்கள்.

தம்பி: உங்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால்,  எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உமர்: உனக்கு தெளிவாக விளக்குகிறேன்.  

நாம் இந்த வருடம் ரமளான் மாதத்தில், சஹாபாக்களின் நடபடிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஐந்து சதவிகிதம் கூட நான் எழுதி முடிக்கவில்லை. அதற்குள், நீ சஹாபாக்களை இயேசுவின் அப்போஸ்தலர்களோடு ஒப்பிட முந்திவிட்டாய். இந்த ஒப்பிடுதலை நான் கடைசியில் செய்யலாம் என்று விரும்பியிருந்தேன், ஆனால், நீ கேள்வியை இப்போதே கேட்டபடியினால், ஒரு சுருக்கத்தை உனக்குத் தருகிறேன். இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள், அதாவது, சஹாபாக்களின் நடபடிகளில் இன்னும் 95% சதவிகித விவரங்களை நாம் நம் உரையாடல்களில் தொடவே இல்லை.

அப்போஸ்தலர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles)

இயேசுவின் சீடர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles) என்பதை இப்போது விளக்குகிறேன்.  இந்த தொடர்கள் அனைத்தும் முடிக்கும்  போது, முஹம்மதுவின் சஹாபாக்கள் தவறான வழியில் நடத்தப்பட்டார்கள் (Wrongly Guided Caliphs) என்பதை நீயே புரிந்துக் கொள்வாய்.

தம்பி: போதும் போதும்… முதலில் இயேசுவின் சீடர்கள் எப்படி அனாதைகள் இல்லை என்பதை விளக்குங்கள். எனக்கு வளவளவென்று பேசிக்கொண்டு இருக்க நேரமில்லை.

உமர்: அடப்பாவமே!  நீ தானே என்னை அழைத்து உடனே பேசனும் என்றுச் சொன்னாய்!  இப்போது அப்படியே தலைகீழாக பேசுகிறாயே! நீ அவசரக்காரணுக்கு தம்பியாக இருப்பாய் போல் இருக்கிறதே!

தம்பி: உங்களின் கடைசி வரியை நான் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறேன் [கிண்டலாக சிரிக்கிறார்….]

உமர்: சிரிப்பாய் தம்பி, சிரிப்பாய்…. 

சரி போகட்டும் விவரத்திற்கு வருகிறேன்,

அப்போஸ்தலர்களை இயேசு எப்படி வழிநடத்தினார் என்பதை உனக்கு விளக்குகிறேன். 

நீ அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும்போது, சீடர்களோடு எப்படி தேவன் இடைப்பட்டார் என்பதை கவனிக்கமுடியும். அதே நேரத்தில், சஹாபாக்களை எப்படி அல்லாஹ் அம்போ என்று விட்டுவிட்டார் என்பதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியும்.

அப்போஸ்தலர்கள் நடபடிகள்சஹாபாக்கள் நடபடிகள்
இயேசுவின் ஊழியம் 3.5 ஆண்டுகள்
முஹம்மதுவின் ஊழியம் 23 ஆண்டுகள்.
இயேசுவின் சொல்லும் செயலும் மட்டுமே அவர்களின் சொத்து. பழைய ஏற்பாடு அவர்களிடம் இருந்தது.
குர்-ஆனின் 6236+ வசனங்களும், 23 ஆண்டுகால சுன்னாவும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும்)
உலக பிரகாரமாக, இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் கூட அவருடைய சீடராகவில்லை. இயேசுவின் தாய் மரியாள் விசுவாசியாக இருந்தார்கள்.
முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள், முஹம்மதுவின் மருமகன்கள், இதர சொந்தக்காரர்கள், மதினா முஸ்லிம்கள், இதர முஸ்லிம்கள் இருந்தார்கள்.
தலைவர்கள்: பேதுருவும், யோவானும். இவர்களை இதர சீடர்கள் தலைவர்களாக அல்லது முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக கண்டார்கள். இயேசுவும் பேதுருவை ”சீடர்களை வழி நடத்தும் படி தயார் படுத்தியிருந்தார்”.  பார்க்க யோவான் 21:15-17
தலைவர்கள்: முஹம்மதுவிற்கு நெருங்கிய தோழர்களில், சிலர் தாங்கள் தலைவராக வேண்டும் என்றனர், ஒருவர் ”இன்னார் தலைவராக வரும்வரை நான் உருவிய வாளை உறையில் போடுவதில்லை” என்றார்.  அன்ஸார்கள் தாங்கள் தான் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் என்றனர், முஹாஜிர்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்றனர்.  இவர்கள் மத்தியிலே ஒருமனம் இல்லை.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் சொல்லையும் செயல்களையும் மனதில் பதித்து இருந்தனர்.
சஹாபாக்கள் முஹம்மதுவின் சொல்லையும் செயல்களையும் மனதில்  பதித்து இருந்தனர். குர்-ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்தவர்களும் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இயேசு மரித்தார், உயிர்த்தெழுந்தார், 40 நாட்கள் அவர்களோடு அனேக காரியங்களை பேசினார், சீடர்களை தயார்படுத்தினார்.
முஹம்மது மரித்தர், மண்ணோடு மண்ணாக மாறிவிட்டார். சஹாபாக்களை தயார்படுத்தவில்லை, தனக்குப்பிற்பாடு யார் தலைவர் என்று தெளிவாக சொல்லிவைக்கவில்லை, எழுதியும் வைக்கவில்லை.
இயேசுவின் சீடர்களிடம் ஒருமனம் இருந்தது.
சஹாபாக்களிடம் ஒருமனம் தவிர்த்து மற்ற அனைத்தும் இருந்தது.
இயேசு பரலோகம் சென்றார், பரிசுத்த ஆவயானவர் சீடர்களிடம் வந்தார். உங்களை நான் திக்கற்றவர்களாக விடேன் என்றார் (பார்க்க யோவான் 14:16-18, 6:7-11)
முஹம்மது மரித்தார், ஜிப்ராயீல் தூதனும் தன் ஜிராக்ஸ் கடையை முடிவிட்டு சென்றுவிட்டார் (இனி ஜிராக்ஸ் எடுக்க ஒன்றுமில்லை என்பதால், அவர் சென்றுவிட்டார் என்று முஸ்லிம்கள் சொல்லுவார்கள்)
சீடர்கள் ஒருமனப்பட்டு, தங்கள் ஆஸ்திகளை நிலங்களை விற்று பொதுவாக அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். (அப் 2:45,46)
தந்தை மரித்த அடுத்த நாளே தனக்கு ஆஸ்திகளை கொடுங்கள் என்று சண்டை போட்ட மகள் ஃபாத்திமா. ஆறு மாதங்கள் இதனால் அபூ பக்கரிடம் பேசாமல் இருந்து அப்படியே மௌனமாக மரித்துவிட்டர். ஆஸ்திக்காக மருமகனும், முஹம்மதுவின் இதர மனைவிகளும், சொந்தக்காரர்களும் போட்டி போட்டனர். 

முஹம்மது மரித்த பிறகு, சஹாபாக்கள் தங்கள் இச்சைகளின் படி வாழ ஆரம்பித்தனர். இவர்களை வழி நடத்த யாருமே இல்லை, பெற்றோர்கள் இருந்தும் அனாதைகளாகவும், பிள்ளைகள் இருந்தும் மலடிகளாகவும் காணப்படும் மக்களைப் போல இவர்களும் வாழ்ந்தார்கள். 

தம்பி: இன்னும் நீங்கள் “இயேசுவின் சீடர்கள் அனாதைகள் இல்லை என்று நிருபிக்கவில்லையே!”.

உமர்: வருகிறேன்.. வருகிறேன். 

அ) இயேசுவைப் போல அற்புங்கள் செய்த சீடர்கள்: 

அற்புதங்களும் அடையாளங்களும் சீடர்கள் மூலமாக இயேசு செய்தார். இதனால், இவர்களுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள், இவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீக அங்கீகாரம் உள்ளது என்பதை மக்கள் கண்டனர், இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும்  ஒரு அற்புத அடையாளமுண்டு, நீயே இவைகளை படித்துப் பார் தம்பி: அப் 3:1-11, 5:15-16, 5:19-20, 8:5-13, 9:32-42, 12:7-17, 13:8-11, 14:8-10, 16:16-18, 16:24-33, 19:11-20.

ஆனால், சஹாபாக்கள் முஹம்மதுவைபோல, சண்டைபோட்டார்களே  தவிர, தெய்வீக கரம் இவர்களோடு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்த அற்புதமும், அடையாளமும் சஹாபாக்கள் செய்யவில்லை. சஹாபாக்கள் மூலமாக அல்லாஹ் செய்யவில்லை.

ஆ) பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்:

இயேசுவின் சீடர்களுக்கு வழிகாட்டியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் நேரத்தில் சரியான வழியில் அவர்களை நடத்தினார் (பார்க்க அப்: 8:26-40, 13:2-4, 16:6-7).

சீடர்களுக்கு தரிசனங்கள் மூலமாக வழி காட்டினார், (பார்க்க அப் 10:1-48, 16:9-10). 

இவர்களையா தம்பி நீ அனாதைகளென்றுச் சொல்கிறாய்? இப்படிப்பட்ட வழிகாட்டல்கள் சஹாபாக்களுக்கு இல்லை என்பதால், அவர்களை அனாதைகள் என்றேன்.

தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி சபை செய்யவேண்டிய காரியங்களை முன்கூட்டியே சொன்னார் (பார்க்க அப் 11:27-30). இயேசு தரிசனத்தில் காணப்பட்டு, பவுலை பலப்படுத்தினார் (பார்க்க 18:9-10)

இப்படி பல வகைகளில், தேவனின் கரம் அப்போஸ்தலர்களோடு இருந்து, வழி காட்டியது. 

இஸ்லாமை எடுத்துக் கொண்டால், நான் ஒருவன் (அல்லாஹ்) எனக்கு ஒருவன் (முஹம்மது) அவ்வளவு தான் கதை முடிந்துவிட்டது. முஹம்மதுவிற்கு பிறகு மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? சஹாபாக்களுக்கு குர்-ஆன் வழிகாட்டிவிடும் என்ற ஆசையில் அல்லாஹ் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது.

இ) சீடர்களின் பரம எதிரியை, பரலோக நண்பனாய் மாற்றினார்:

சவுல் என்ற பெயரில் ஒரு யூத அறிஞன், சீடர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கும் போது, இயேசு அவனை சந்தித்து, இரட்சித்து, சபையிலே சேர்த்தார், இவர் தான் பவுல், இவரை அறியாமல் தற்கால முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் (பார்க்க அப் 9:1-30).

இப்படி, இயேசுவின் சீடர்களோடு, பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் போதெல்லாம் வழி காட்டினார். ஆனால், இப்படிப்பட்ட வழிகாட்டுதல் இஸ்லாமிலே எங்கே என்று தேடிப்பார் தம்பி.

முஹம்மது உயிரோடு இருந்தபோது,  அற்பமான விஷயங்களுக்கெல்லாம், ஓடிப்போய் குர்-ஆன் வசனங்களை கொண்டு வந்த ஜிப்ராயீல் தூதன், சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கழுத்தை வெட்டிக்கோண்டு செத்துக் கொண்டுஇருக்கும் போது ஏன் ஒரு முறை கூட வரவில்லை?  

சஹாபாக்களும் மனிதர்கள் என்பதால், அவர்களுக்கு வழிக்காட்டல் தேவைப்பட்டது. குர்-ஆனை தனக்கு ஏற்றாற்போல பொருள் கொள்வதும், எதைச் செய்தாலும், முஹம்மது இப்படிச் சொன்னார் என்று சாக்கு சொல்லிக்கொண்டு, இதர முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொல்வதும், சஹாபாக்களின் வாழ்வில் அனுதின நிகழ்வு ஆகிவிட்டது. இதற்கு ஒத்தாசையாக குர்-ஆனின் வசனங்கள் இருந்தது தான் முக்கியமான காரணம். வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடுவது? குர்-ஆனை அடிப்படையாக வைத்து தான் அனைத்து தீய செயல்கள் இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் நடந்தது.

முதல் நான்கு கலிபாக்கள் “நேர் வழி நின்ற கலிஃபாக்கள் அல்ல, கோணலான வழிநின்ற கலிஃபாக்கள்” ஆவார்கள். இதற்கு முழுவதுமாக பொறுப்பேற்கவேண்டியவர், குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவர் “அல்லாஹ்” தான்.  இந்த விஷயத்தில் முஹம்மதுவையும் நான் குற்றவாளியாக தீர்க்கமாட்டேன், அவர் வெறும் அம்பு தான், எய்தவனுடையது தான் எல்லா குற்றமும்.

தம்பி: போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கு அவசர அவசரமாக போன் செய்து பேசினேன் பாருங்கள், என் புத்தியை ….

உமர்: வேண்டாம் தம்பி, உன் புத்தியை திட்டாதே, அதை சரியாக தீட்டு. 

தம்பி: வாய் ஜாலம் எல்லாம் போதும், அடுத்த முறை பார்க்கலாம்.  ஒரு நாள் உங்களை நான் சரியான லாஜிக்கை வைத்து வாரப்போகிறேன் பாருங்க, அப்போது, துண்டைக்காணும், துணியக்காணும் என்று நீங்க ஓடப்போறீங்க. 

உமர்: என்ன தான் இருந்தாலும், நீ என் தம்பி உன்னிடம் தோற்பது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கிறிஸ்தவத்தை யாரிடமும் தோற்கவிடமாட்டேன். நீ தோற்றுப்போகும் பக்கத்தில் இருக்கிறாய் அல்லவா… அதை நெனச்சாத் தான்…

[கால் கட்டாகி விட்டது… பீப்… பீப்… பீப்… மறுபடியும் கால் செய்தால், ”நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை” என்ற சத்தம் வருகிறது…]

உமர்: ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா…. அடுத்த முறை நான் கடிதம் எழுதாமல் இருப்பேனா… நீ படித்து மறுபடியும் எனக்கு கால் பண்ணாமல் தான் இருக்கப்போகிறாயா… பார்த்துக் கொள்ளலாம் தம்பி…. 

அன்பான ஆண்டவரே, என் தம்பியை இரட்சியும்.

தேதி: 2 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்