ஸூரா 18:50 & 1 யோவான் 3

சாத்தானின் பிள்ளைகளுக்கும் இறைவனின் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை அறிதல்

ஆசிரியர்: ரோலண்ட கிளார்க்

”பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் போலவே காணப்படுகிறார்கள்” என்று கடந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் கவனித்துள்ளார்கள். பிள்ளைகள் தங்கள் தோற்றத்தில் மாட்டுமல்ல, குணநலன்களிலும் பெற்றோர்களை பிரதிபலிப்பவர்களாக காணப்படுகிறார்கள். எனவே தான் “தாயைப் போல பிள்ளை” என்ற பழமொழி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழமொழி ஆன்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சாத்தான் பற்றி ஸூரா 18:50 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

“. . . அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும். ”

”சாத்தானின் இனம்” என்பது எதனை குறிப்பிடுகிறது? இதற்கு யூசுப் அலி அவர்கள் தன் குர்-ஆன் மொழியாக்கத்தின் பின் குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

2394: சாத்தானின் இனம்: இதனை நாம் நேரடியான பொருளில் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. சாத்தானை பின்பற்றும் அனைவரும் அவனது சந்ததியாகவே (இனமாகவே) நாம் கருதவேண்டும்.

தீய செயல்கள் செய்பவர்களை சாத்தானோடு சம்மந்தப்படுத்தி பைபிள் கூறுகிறது :

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும் ; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே. (1 யோவான் 3:8-12)

ஆபேலின் கொலைக்கு பின்னால் தூண்டுதலாக இருந்தவன் சாத்தான் என்று இயேசு கூட கூறியுள்ளார். யூத மத தலைவர்கள் தாங்கள் “ஆபிரகாமின் பிள்ளைகள்” என்று தவறாக கூறியதை இயேசு கடிந்துக்கொண்டார். மேலும், அவர்களை நோக்கி இயேசு “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் ;. . . . அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்;… (யோவான் 8:44)” என்று கூறினார்.

கொலை செய்வது சாத்தானுடைய ஒரு குணமாக அல்லது செயலாக இருப்பதினால், தற்காலத்தில் நடைப்பெறும் உலக நடப்புகளை சாத்தானின் செயல்களாக நாம் கருதலாம். “இவ்வாண்டு ரமளான் மாதத்தில் நடைப்பெற்ற வன்முறைகளால் மரித்த 3,400 இஸ்லாமியர்களின் மரணத்திற்கு பின்னால், இருட்டு சக்திகளின் (சாத்தானின்) கைவேலை இருக்குமோ?”. இந்த வன்முறைகளில் ஈடுபட்ட மனிதர்கள் ஸுரா 18:50 கூறுவது போல, சாத்தானின் சந்ததிகளாக (இனமாக) இருப்பார்களோ?

தொடர்ச்சியாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு, இஸ்லாமிய உம்மாவை (நம்பிக்கையை) காயப்படுத்தி, இரத்தம் சிந்த வைக்கும் போது, இதனை காணும் மக்கள் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். இதுமட்டுமல்ல, அமைதியை விரும்பும் முஸ்லிகள் இப்படி முஸ்லிம்கள் சண்டையிட்டு இரத்தம் சிந்தி மரிப்பதை காணும் போது. அதிகமாக ஏமாற்றமடைகிறார்கள். இவர்களில் சில தைரியமான முஸ்லிம்கள் கீழ்கண்டவிதமான கேள்விகளை கேட்கிறார்கள்:

“2012ம் ஆண்டு, ரமளான் மாதத்தில் சக முஸ்லிகளால் கொலை செய்யப்பட்டு மரித்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இதர மாதங்களை விட 66% உயர்ந்துள்ளது, உண்மை இப்படி இருக்கும் போது, ரமளான் மாதத்தில் சாத்தான் விலங்கிடப்படுகிறான் என்று கூறுவது எப்படி சாத்தியமாகும்?” (இந்த கட்டுரையை படிக்கவும்).

சாத்தான் பற்றிய வேறுபல கேள்விகளுக்கான விவரமான ஆய்வை இந்த கட்டுரையில் படிக்கலாம்: ”நம்முடைய பொதுவான எதிரி – சாத்தான்”.

உவமையாக பேசும் போது சாத்தானுக்கு சந்ததி (பிள்ளைகள்) இருப்பதாக நாம் கூறும் போது, இறைவனின் பிள்ளைகள் என்று ஏன் நாம் விசுவாசிகளை குறிப்பிடக்கூடாது? இதனை படித்தவுடன், இஸ்லாமிய வாசகர்கள்,

குர்-ஆனோ அல்லது ஹதீஸ்களோ, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே குடும்ப உறவு போன்ற ஒரு உறவு இருப்பதாக கூறியிருக்கிறதா? அதாவது இறைவன் அப்பாவாகவும், மனிதர்கள் பிள்ளைகளாகவும் எங்கேயாவது கூறியிருக்கிறதா?

என்று கேள்வி எழுப்புவார்கள்.

முஸ்லிம்கள் இறைவனை ”தகப்பனாகவும்”, மனிதர்களை ”பிள்ளைகளாகவும்” கருதமாட்டார்கள். இது குர்-ஆனின் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: இஸ்லாமுக்கு பிதா இல்லை.

இறைவன் நமக்கெல்லாம் ஒரு அப்பாவைப் போல இருக்கிறார் என்பதை ஆணித்தரமாக எதிர்க்கும் முஸ்லிம்கள், முந்தைய தீர்க்கதரிசிகள் இறைவனை தகப்பனாகவே குறிப்பிட்டார்கள் என்பதை கற்பனையும் செய்து பார்க்கமாட்டார்கள், இதனை முஸ்லிம்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாது, ஏனென்றால், இறைவனை தகப்பனாக கருதுவது ஒரு மன்னிக்கமுடியாத பாவமாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், யூத வேதாகமம் சர்வ வல்ல இறைவனை தகப்பன் என்றே குறிப்பிடுகின்றது.

யூத வேதமாகிய “தனக்”கில் நாம் கீழ்கண்டவாறு படிக்கிறோம்:

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் துரோகம் பண்ணுவானேன்? (எரேமியா 31:20, ஓசியா 1:10,மல்கியா 2:10)

இன்ஜிலில் (நற்செய்தி) இயேசு தம் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை காணமுடியும்:

”…. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.” (லூக்கா 11:2-4)

பழைய ஏற்பாட்டில், அனேக இடங்களில் பிதா குமாரன் என்ற உறவு பற்றி கூறும் வசனங்கள் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இயேசு இறைவனின் குமாரன் என்பதை காட்டும் அனேக வசனங்கள் உண்டு. இதைப் பற்றிய புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை இங்கு காணலாம்: மத்தேயு 17:5, 26:63-66; மாற்கு 2:1-12, யோவான் 10:24-38.

முடிவுரையாக, இயேசு கூறிய ஒரு உவமையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த உவமையில் ‘மேசியா என்பவர், இறைவனின் குமாரனாக’ இருக்கிறார் என்பதை இயேசு கூறுகிறார். இயேசுவின் உவமையை கேட்டுக்கொண்டு இருந்த யூத மத தலைவர்கள், இயேசு எதைச் சொல்கிறார் என்பதை புரிந்துக்கொண்டார்கள். இந்த உவமைப் பற்றி லூக்கா 20:9-19 வசனங்களில் காணலாம்.

ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.

அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள்.

இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார்.

அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக் குறித்துத் தான் இயேசு சொல்கிறார் என்பதை உணர்ந்துக்கொண்டார்கள், அதாவது மேலே சொன்ன உவமையில் வரும் அந்த தீய உழவர்கள் இவர்கள் தான். இதனால் இயேசுவை கைது செய்ய நினைத்தார்கள், ஆனால் மக்களுக்கு பயந்ததினால் அவரை கைது செய்யவில்லை.

இறைவனை குறிப்பிடும் போது அவரை பிதா என்று அழையுங்கள் என்று இயேசு தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார். நான் இப்போது ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், “நீங்கள் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் போது அவரை எப்படி அழைக்கிறீர்கள்?”, இறைவனை பிதாவாக அழைக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?

இறைவன் நம் பிதாவாக இருக்கிறார் என்பதைப் பற்றி மேலும் அறிய எனக்கு எழுதவும்.

மஸிஹாவின் தெய்வீகத்தன்மையைப் பற்றி மேலும் அறியவேண்டுமென்று விரும்புகிற வாசகர்கள் இந்த கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்: 1, 2

1 யோவான் 3:8ம் வசனத்தை படிக்கும் போது எழும் இன்னொரு முக்கியமான கேள்வி: ” பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். என்று 1 யோவான் 3:8 சொல்வதின் அர்த்தமென்ன?”.

இவைகள் பற்றி அறிய இந்த இரண்டு கட்டுரைகளை படியுங்கள்: 1) Timeless Truth Encrypted in Ancient Wisdom and 2) Wasn’t the God of the Bible strong enough to save Jesus from being killed?

ஆங்கில மூலம்: Surah 18:50 & 1 John 3 - Distinguishing God's Children from the Devil's

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்