பாகம் 4 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

(பிஜே அவர்களின் விளக்கமும், இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கமும்)

முன்னுரை: 

இந்த தலைப்பின் முந்தைய மூன்று கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

இவைகளின் தொடர்ச்சியாக, பிஜே அவர்கள் "முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம்” சொல்லுதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம். மேலும், இவரது விளக்கமும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களும் ஒன்றாக இருக்கின்றதா அல்லது எதிர்மறையாக இருக்கின்றதா என்பதையும் இக்கட்டுரையில் காண்போம். கடைசியாக, பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய ”முஸ்லிம் ஹதீஸ்” பற்றி சில கேள்விகளை பிஜே அவர்களிடம் கேட்போம்.

இந்த தொடர் கட்டுரைகளின் பின்னணி: இந்த தொடர் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. சென்னை தண்ணீரில் மிதந்த போது, எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு பேருதவி புரிந்தனர். ஆனால், இவர்களின் இறைவேதமாகிய குர்-ஆனும், இறைத்தூதராகிய முஹம்மதுவும் இவர்களின் இச்செயல்களை அங்கீகரிக்கமாட்டார்கள். இதனை நாம் இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறும்பான்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் காணலாம். ஆனால், இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, பணம் செலவு செய்து முஸ்லிமல்லாதவர்களுக்கு உதவி செய்தனர். நாம் கண்டது கனவா அல்லது நிஜமா? இதனை மாற்று மதத்தவர்கள் எப்படி புரிந்துக் கொள்வது? இதனை நமக்கு புரியவைக்கவேண்டியது தமிழ் முஸ்லிம்களின் கடமையாக உள்ளது. முஸ்லிம்கள் நமக்கு இதனை புரியவைப்பதற்கு உதவியாக இருக்கும்படியாக, சில இஸ்லாமிய ஆதாரங்களை நான் இத்தொடர் கட்டுரைகளில் முன்வைக்கிறேன். முஸ்லிம்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கும் போது இவ்விவரங்கள் அவர்களுக்கு  பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

1) முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் முதலில் சொல்வது பற்றி பிஜே அவர்களின் நிலைப்பாடு

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்வது பற்றி பிஜே அவர்களின் நிலைப்பாடு இது தான்.

அ) தற்காலத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு (காஃபிர்களுக்கு) முதலில் முஸ்லிம்கள் “ஸலாம்” சொல்லலாம்.

ஆ) முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ல் “யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்” முதலில் ஸலாம் சொல்லக்கூடாது என்று முஹம்மது கட்டளையிட்டது உண்மை தான். ஆனால், அது அக்காலத்து யூத கிறிஸ்தவர்களுக்காக கொடுக்கப்பட்ட கட்டளையாகும். இக்காலத்தில் நம்மோடு வாழும்  யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்தாது.

இ) முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ல் சொல்லப்பட்ட விவரம் அக்கால யூத கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே, இந்துக்களும் இதர முஸ்லிமல்லாதவர்களும் இதில் அடங்கமாட்டார்கள்.

ஈ) இதன் படி, அக்காலத்தில் யூத கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்ல முஸ்லிம்கள்  அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும், தற்காலத்தில் முஸ்லிம்கள் “எல்லா காஃபிர்களுக்கும் முதலாவது ஸலாம் சொல்லலாம்”. அதாவது தற்காலத்தில் ஒரு முஸ்லிம், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களும் மேலும் இதர மக்களுக்கும் முதலாவது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில் தவறில்லை, இதனை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இவைகள் தான் பிஜே அவர்களின் “ஸலாம்” பற்றிய நிலைப்பாடு, இதனை கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் மூலம் அறியலாம்.

2) முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் முதலில் சொல்வது பற்றி இதர இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.

குர்-ஆனின் உண்மை விளக்கத்தையும், முஹம்மதுவின் உண்மை வழிகாட்டுதலையும் நாம் பார்க்கவேண்டுமென்றால், முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருக்கும் நாடுகளில் காணமுடியாது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளிலும் தான் அதனை நாம் காணமுடியும். 

முஸ்லிம்களின் கை (எண்ணிக்கை) குறுகியதாக இருக்கும் போது எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அதே போல, முஸ்லிம்களின் கை (எண்ணிக்கை) ஓங்கி இருக்கும் போது, எப்படி இஸ்லாமை “முழுவதுமாக” பின்பற்றவேண்டும் என்று இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. 

பிஜே போன்ற சில இஸ்லாமிய அறிஞர்கள் (இஸ்லாமியரல்லாத நாடுகளில் வாழுபவர்கள்), இஸ்லாம் சொல்லும் முதலாவது வழிகளில் செல்கிறார்கள் (வேறு வழி இல்லை என்பதால்). ஆனால், இந்தியா, ”பாகிஸ்தான் போல” பெரும்பான்மை முஸ்லிம் நாடு போல மாறுமானால், இவர்களின் நிலைப்பாடே வித்தியாசமாக இருக்கும். 

இப்போது “காஃபிர்களிடம்” எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களுக்கு எப்படி ஸலாம் சொல்லவேண்டும் என்று இதர இஸ்லாமிய அறிஞர்கள் போதிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். அதன் பிறகு, பிஜே அவர்களின் நிலைப்பாட்டை கேள்வி கேட்போம்.

islamqa.info: ”இஸ்லாம் கேள்வி பதில்கள்” என்ற தளத்தில் முஸ்லிம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். அவைகளிலிருந்து சில மேற்கோள்களை இப்போது காண்போம். வாசகர்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி, அந்த தளத்தில் நாம் மேற்கோள் காட்டிய விவரங்களை ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாம். 

அ) முஸ்லிமே, நீ ஒரு காஃபிருக்கு முதலாவது கைகளை குலுக்காதே! அவன் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தால், அவனுக்கு தேனீர் கையில் கொடுக்காதே, கோப்பையை மேஜையில் வைத்துவிடு:

ஒரு முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது கைகளை குலுக்க முஸ்லிம்கள் முயலக்கூடாது. அந்த காஃபிர் உங்கள் கைகளை முதலாவது பிடித்து குலுக்கினால், நீங்கள் அதன் பிறகு குலுக்கலாம்.

ஒரு காஃபிருக்கு தேனீர் கொடுப்பது பற்றி சொல்லவேண்டுமென்றால், ஒரு காஃபிர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போது, முஸ்லிமாகிய நீ அவருக்கு தேனீர் கோப்பையை கொடுக்கக்கூடாது, இது மக்ரூ ஆகும், இதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஆனால், அந்த காஃபிர் உட்கார்ந்து இருக்கும்போது, தேனீர் கோப்பையை அவருக்கு முன்பாக இருக்கும் மேஜையில் வைத்துவிடுவதில் தவறு இல்லை. 

ஈஸா குர்-ஆன் உமரின் விமர்சனம்: நட்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிற்கோ, கிறிஸ்தவருக்கோ தேனீர் கொடுப்பது மனிதர்கள் வாழும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடப்பது. இதே போல,  தங்கள் வீடுகளுக்கு வருகை தரும் முஸ்லிம்களுக்கு இந்துக்கள் கிறிஸ்தவர்கள் தேனீர் கைகளில் ஏந்திச் சென்று கொடுப்பது “சமுதாயத்தில் மத நல்லிலக்கணத்தை உண்டாக்கும்”. ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி போதனை செய்துள்ளார்கள் என்பதை கவனியுங்கள். 

தமிழ் முஸ்லிம்களுக்கு கேள்விகள்:  குறைந்தபட்ச மரியாதையின் வெளிப்பாடாகிய ”தேனீர் கோப்பையை கைகளில் கொடுப்பதை” முஸ்லிம்கள் அறிஞர்கள் இஸ்லாமை காரணம் காட்டி தடை செய்வார்கள் என்றால், “இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உயிரை கொடுத்து முஸ்லிம்கள் சென்னையில் உதவினார்களே, இதனை நாம் எப்படி புரிந்துக் கொள்வது? இதன் பின்னணி என்ன?”.

ஆ) முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது “ஸலாம் – வாழ்த்து” சொல்லி, காஃபிர்களுக்கு முன்பாக முஸ்லிம்களே நீங்கள் தாழ்ந்துவிடாதீர்கள்.

இஸ்லாம் கேள்வி பதில்கள் தளத்தில் “முஸ்லிமல்லாதவருக்கு வாழ்த்து சொல்வது எப்படி?” என்ற கேள்விக்கு கீழ்கண்ட பதில் சொல்லப்பட்டுள்ளது. அதனை தமிழில் நான் தருகிறேன்.

ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது “ஸலாம்/வாழ்த்து” சொல்வது ஹராம் (இஸ்லாமில் அனுமதிக்கப்படாதது) ஆகும். ஏனென்றால், நம் இறைத்தூதர் இப்படி சொல்லியுள்ளார்.

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள் (முஸ்லிம் ஹதீஸ்). . . .

இதே போல, ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவருக்கு நல்வரவு (Welcome – அஹ்லன் வ ஸஹ்லன்) என்று முதலாவது சொல்லக்கூடாது. இப்படி சொன்னால், காஃபிர்களை நாம் மதிப்பதாக ஆகிவிடும். ஆனால், காஃபிர்கள் முதலாவது நமக்கு நல்வரவு சொன்னால், நாமும் அதற்கு பதில் நல்வரவு சொல்லலாம். அல்லாஹ்விற்கு முன்பாக முஸ்லிம்கள் உயர்ந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள்  சொல்லி தங்களை தாழ்த்திக் கொள்ளக்கூடாது. 

முடிவுரையாக, ஒரு காஃபிரை முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்து சொல்லக்கூடாது, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனை தடுத்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை மதித்தால், அது முஸ்லிம்கள் தாழ்ச்சி அடைந்துவிட்டதாக கருதப்படும். . . .

சில நேரங்களில் வேறு வழியில்லாமல், ஒரு காஃபிருக்கு ஒரு முஸ்லிம் முதலாவது வாழ்த்து சொல்லவேண்டி வரும்போது, அப்போது வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. ஆனால், இந்த வாழ்த்து “ஸலாம்” என்றுச் சொல்வதாக இருக்கக்கூடாது, அதற்கு பதிலாக “நல்வரவு” என்றோ, “எப்படி இருக்கிறீர்கள்?” என்றோ சொல்லலாம். இப்படி சொல்லும்போது, அவர்களை நாம் கனப்படுத்துவதாக ஆகாது, ஒரு காரணத்திற்காக வாழ்த்து சொல்வதாக அமையும். 

. . . 

இப்னு கைய்யும் அவர்கள் (இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக), தம்முடைய ஜாஅத் அல் மஆத்(2/424) புத்தகத்தில் காஃபிருக்கு முதலாவது வாழ்த்து சொல்வது பற்றி இவ்விதம் கூறியுள்ளார்:

இஸ்லாமிய அறிஞர்களின் குழு சொன்னதாவது: “ஒரு முஸ்லிம் ஒரு காஃபிருக்கு முதலாவது வாழ்த்து சொல்வது அனுமதிக்கப்பட்டது, ஆனால், அதற்கு கீழ்கண்ட ஏதாவது ஒரு அழுத்தமான காரணம் இருக்கவேண்டும்: அதாவது முஸ்லிமின் நோக்கம் இதன் மூலம் நிறைவேறவேண்டும், அல்லது முஸ்லிம் மீது வன்முறை தாக்குதல் நடைப்பெறும் என்று பயமிருந்தால் அல்லது உறவினராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு முக்கியமான காரணத்திற்காக, ஒரு முஸ்லிம் முதலாவது வாழ்த்து கூறலாம்”.

ஈஸா குர்-ஆன் உமரின் விமர்சனம்: வாசகர்கள் நன்றாக கவனியுங்கள். பேச்சுத்திறன் கொண்ட மனிதர்கள் ஒரு சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்தைக் கூட இஸ்லாம் தடை செய்கிறது. ஒரு முஸ்லிமுக்கு ஒரு காரியம் நடைப்பெறவேண்டும் என்றால், உள்ளத்திலிருந்து அல்லாமல், வெளிவேஷம் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் போதிக்கிறார்கள்.  சில வேளைகளில் தர்மசங்கடமான நிலையில் முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்து சொல்வதாக இருந்தால் கூட “ஸலாம்” என்று சொல்லக்கூடாதாம், “நல்வரவு” என்றோ, “எப்படி இருக்கிறீர்கள்?” என்றோ சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு கீழ்தரமான கோட்பாடுகள்? இப்படி பெரும்பான்மை மக்கள் நினைத்தால், அச்சமுதாயத்தில் வாழும் சிறும்பான்மையின் நிலை என்னவாக இருக்கும்?

தமிழ் முஸ்லிம்களுக்கு கேள்விகள்: முஹம்மது முஸ்லிம் ஹதீஸில் சொன்னது வெறும் யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா “முஸ்லிமல்லாதவர்களுக்கும்” என்று இதர இஸ்லாமிய அறிஞர்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே மட்டும் அந்த ஹதீஸை மாற்றிச் சொல்கிறார்? இதில் எது உண்மை?

3) பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய முஸ்லிம் ஹதீஸ் 4376

பிஜே அவர்கள் ”மாற்று மதத்தவருக்கு ஸலாம் கூறலாமா?” என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐ குறிப்பிட்டார்.  இந்த ஹதீஸில் வரும் ஸலாம் பற்றிய பகுதிக்கு பதில் அளித்தார். ஆனால், யூத கிறிஸ்தவர்களை சாலையில் நெருக்கடியான பாதையில் ஒதுங்கிப்போகச் செய்யுங்கள் என்ற பகுதிக்கு பதில் தரவில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (4376)

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விவரங்கள் உள்ளன. முஹம்மதுவும் அவரது சகாக்களும் மக்காவில் சிறும்பான்மையாக இருந்தபோது, இந்த கட்டளையை முஹம்மது கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் மக்காவில் யூத கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருந்தனர், மதினாவில் அவர்கள் அதிகமாக இருந்தனர். மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த பிறகு ஆரம்ப காலக் கட்டத்திலும் முஹம்மது மேற்கண்ட கட்டளையை கூறியிருக்கமுடியாது, காரணம் அப்போதும் அவரிடம் ஆள்பலம் குறைவாகவே இருந்தது. ஆனால், முஹம்மது வழிப்பறி கொள்ளைகளை செய்து, அக்கம் பக்கம் இருப்பவர்கள் மீது போர் தொடுத்து ஆள்பலமும் பண பலமும் பெருகிவிட்ட பிறகு தான் மேற்கண்ட கட்டளையை கொடுத்திருக்கமுடியும்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது தான், யூத கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லிமல்லாதவர்கள் சாலையில் செல்லும் போது, நெருக்கடியான பாதையில் செல்ல அவர்களை கட்டாயப்படுத்தமுடியும். உதாரணத்திற்கு, இந்தியாவில் முஸ்லிம்கள் இப்படி நெருக்கடியான பாதையில் செல்லும் படி, கிறிஸ்தவர்களையோ, இந்துக்களையோ கட்டாயப்படுத்தினால், அவர்களின் வால் முழுவதுமாக வெட்டப்படும். ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இப்படி செய்தால், கிறிஸ்தவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. 

பாகிஸ்தானில் / ஆப்கானிஸ்தானில் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லிமை பார்க்கும் போது, “அஸ்ஸாமு அலைக்கும் - உங்களுக்கு மரணமுண்டாகட்டும்” என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மது சொன்னது போல முஸ்லிம்கள் “வா அலைக்கும் – உங்கள் மீதும்” என்று சொல்லிவிட்டு, அமைதியாக சென்றுவிடுவார்களா? நிச்சயமாக இல்லை, அப்போதே அந்த கிறிஸ்தவர் மீது மரணம் உண்டாகிவிடும்.  ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான வழக்கைப்போட்டு, சித்திரவதை செய்கிறார்கள். இந்த இலட்சனத்தில் “அஸ்ஸாமு அலைக்கும்” என்று சொல்வதற்கே இடமில்லை. 

பிஜே அவர்களே! மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் பாகம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்ன தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், சாலையில் செல்லும் இதர மார்க்கத்தாருக்கு எதிராக இப்படி நடந்துக் கொள்ளுங்கள் என்று கீழ்தரமாக உங்கள் இறைத்தூதர் கூறியிருப்பது எந்த வகையில் நியாயம்? சாலையில் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்பகை எதுவும் இல்லாத நேரத்திலும், பெரும்பான்மை மக்களின் உள்ளத்தில் இப்படிப்பட்ட வெறுப்புணர்வின் விஷத்தை உங்கள் இறைத்தூதர் விதைத்திருப்பது சரியா? 

நம் நாட்டில் பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருக்கிறார்கள். சில சமயங்களில் இவர்களின் தலைவர்களில் சிலர் (முஹம்மதுவைப் போல) தவறான போதனை செய்துவிடுகிறார்கள். இந்த போதனையின் விஷத்தன்மையை சரி பார்க்காமல், பாமர தொண்டர்கள் (முஸ்லிம்களைப்போல), இந்தியாவில் வாழும் சிறும்பான்மையினருக்கு எதிராக நடந்துக் கொள்கிறார்கள். இதனை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.  உங்கள் இறைத்தூதருக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? தற்காலத்தில் இப்படிப்பட்ட போதனைகளைச் செய்து, பாமர மக்களுக்கு மூளைச்சலவை செய்பவர்களுக்கு நீங்கள் என்ன பெயரைச் சூட்டுவீர்கள்? இவர்களை “இறைத்துதர்கள்” என்று அழைப்பீர்களா அல்லது “இழிவான தூதர்கள்” என்று அழைப்பீர்களா? இவர்களுக்கு என்ன பெயர் வைப்பீர்களோ, அதே பெயரைத் தான் உங்கள் முஹம்மதுவிற்கும் முஸ்லிமல்லாதவர்கள் சூட்டுவார்கள். முஸ்லிமல்லாதவர்கள் உங்கள் பதிலுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முடிவுரை: பிஜே அவர்களே, சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால், முஹம்மதுவை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்களே என்று வேதனைப்படுகிறேன். ”சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?” என்ற தலைப்பில் இதுவரை நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளேன், சில இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்துள்ளேன்.  முஹம்மது காஃபிர்களுக்கு எதிராக நடந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கும் போது, முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு உதவியாக கரம் நீட்டினர். இதனை எப்படி புரிந்துக் கொள்வது, உங்கள் பாணியில் விளக்குங்களேன், பிளீஸ்.


சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

ஆங்கில கட்டுரைகள்: