கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?

பதில்: பைபிளை படிக்கும் நீங்கள் குர்-ஆனை படிப்பதினால் எந்த பிரச்சனையும் இல்லை, அது குற்றமும் ஆகாது. ஆனால், குர்-ஆனை படிக்கவேண்டிய அவசியம் உண்டா இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

குர்-ஆனை படிப்பது என்றால் என்ன?

நீங்கள் ”குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்தீர்கள்” என்றுச் சொல்கிறீர்கள், இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் குர்-ஆனை எந்த மொழியில் படித்துக்கொண்டு இருந்தீர்கள்? என்பதாகும்.

நீங்கள் இதற்கு முன்பு, அரபியில் குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்திருந்தால், இப்போது அதனை அரபியில் படிப்பதினால் எந்த ஒரு நன்மையும் இல்லை. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பதினால் என்ன நன்மை உங்களுக்கு கிடைத்தது?  அதே போல, இப்போதும் அதனை அரபியில் படிப்பதினால் என்ன நன்மை? எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனக்கு புரியாத மொழியில் குர்-ஆனை படிப்பதினால் ஒரு நன்மையும் அவருக்கு உண்டாகாது. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பனும், இந்து கோயில்களில் பூசாரி சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் சொல்லும் போது, பக்தி ததும்ப புரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பனும் சமமே! இருவருக்கும் காதுவரைக்கும் எட்டிய சத்தங்கள் (வார்த்தைகள் அல்ல) மூளைக்கு எட்டுவதில்லை.

குர்-ஆனை தமிழில் படித்தல்:

இதுவரை அரபியில் மட்டுமே புரியாமல் குர்-ஆனை படித்த நீங்கள், இப்போது தமிழில் படிக்க விரும்பினால், அது வரவேற்கத்தக்கது. வேதம் என்ற நிலையில் குர்-ஆன் இல்லை. இருந்தாலும், அதில் என்ன சொல்லியிருக்கிறது என்ற அறிவைப் பெறுவதற்காக நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இது குற்றமாகாது. குர்-ஆன் என்பது மட்டுமல்ல, மதசார்பற்ற புத்தகங்களையும், நாத்தீகர்கள் எழுதும் புத்தகங்களையும் அறிவு பெருக்கத்துக்காக படிக்கலாம், இதில் தவறில்லை. நான் கிறிஸ்தவ-இஸ்லாமிய கட்டுரைகளுக்காக, அடிக்கடி குர்-ஆனை படிக்கிறேன்.

குர்-ஆனை தமிழில் படிப்பதின் அவசியம்:

இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து நாம் கிறிஸ்தவத்தை பின்பற்றுவதினால், குர்-ஆனின் போதனைகள் பற்றி நாம் ஓரளவிற்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கவேண்டும். பல நூறு முறை நாம் அரபியில் குர்-ஆனை படித்திருந்தாலும், இரட்சிக்கப்பட்டுவிட்ட பிறகு, ஒரு முறையாவது குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்லுவேன்.

சில வேளைகளில் முஸ்லிம்கள் நம்மிடம் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நமக்கு குர்-ஆன் பற்றி ஒன்றுமே தெரியாது என்றுச் சொல்வார்கள். இவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால், நாம் குர்-ஆனை தமிழிலும் படித்து அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். 

புண்ணியம் கிடைக்கும், நன்மை கிடைக்கும் என்று நம்பி யாரும் குர்-ஆனை படிக்கத் தேவையில்லை. மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை இஸ்லாம் முன்மொழிகின்றது. புரியாமல் படித்தாலும் நன்மைகள் வரும் என்றுச் சொல்வது அறிவுடமையன்று.

சுருக்கம்:

1) குர்-ஆனை அரபியில் படிப்பதினால் எந்த நன்மையும் இல்லை.

2) குர்-ஆனை தமிழில் படிப்பதினால், அதன் போதனைகளை தெரிந்துக்கொண்டு, இஸ்லாம் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளமுடியும்.

3) குர்-ஆனை அரபியிலோ தமிழிலோ படிப்பதினால், புண்ணியமோ, நன்மையோ இல்லை. புண்ணியம் கிடைக்கும் என்றுச் சொல்வது முடநம்பிக்கையாகும். பைபிளையும் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் புரிந்துக்கொள்ளாமல் படித்தால் புண்ணியம் என்றுச் சொன்னால், இதையும்  நம்பாதீர்கள்.

4) முஸ்லிம் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு, குர்-ஆன் பற்றிய குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகின்றது, இது முஸ்லிம்களோடு உரையாடும் போது பயன்படும்.

5) அறிவைப் பொருத்தமட்டில், பார்க்காதே! தொடாதே! என்று கிறிஸ்தவம் சொல்வதில்லை. பார், தொடு ஆனால் புரிந்துக்கொள் என்று தான் சொல்கிறது. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(1 தெச 5:21)

6) நீங்கள் ஒரு பாஸ்டராக  இருப்பீர்களானால், நிச்சயம் குர்-ஆனையும், அதன் விளக்கவுரைகளையும் படித்து கற்றுக் கொள்ளவேண்டும். இது நற்செய்தி அறிவிப்பதற்கு பயன்படும்.

7) பைபிளையும் குர்-ஆனையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறவர்கள் குர்-ஆனை படிக்கலாம். பைபிளின் நிகழ்ச்சிகள் எப்படி குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.

முடிவுரை:

நான் கிறிஸ்தவத்தை ஏற்றுகொண்ட பிறகு, புதிய ஏற்பாட்டை நன்கு படித்து அறிந்துக்கொண்ட பிறகு நான் செய்த முதல் காரியம், என் வீட்டில் தமிழ் குர்-ஆனை கொண்டு வந்தேன். அது வரை என் வீட்டில், அரபி குர்-ஆன் மட்டுமே இருந்தது. சென்னைக்கு என் உறவினர் ஒருவர் சென்ற போது, தமிழ் குர்-ஆன் ஒன்றை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன், அவரும், முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். என் கட்டுரைகளில் நான் முஹம்மது ஜான் தமிழாக்கத்தை அதிகமாக பயன்படுத்த இதுவும் ஒரு காரணம். அதன்  பிறகு அதனை நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன், இன்றுவரை அந்த தமிழாக்கம் என்னிடம் உள்ளது.

எனவே, கிறிஸ்தவர்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இதில் தவறு இல்லை. 

கேள்வி 1: 

நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?

பொருளடக்கம்

கேள்வி 3: 

நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?