பாகம் 6 - கீழைத்தேச (இந்திய‌) ஞானம் பைபிளுக்கு சென்றடைந்ததா? "தவறான விளக்க சிகாமணி செண்பகப்பெருமாள்"

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த தற்போதைய‌ கட்டுரையில் செண்பகப்பெருமாள் அவர்கள் முகவுரையில் எழுதிய இன்னொரு முக்கியமான விஷயத்திற்கு பதிலைக் காண்போம். 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் 1947 இல் எழுதப்பட்ட ஒரு ஆங்கில‌ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொல்வதை மாற்றி விளக்கம் அளிக்கிறார். ஆங்கிலத்தில் மேற்கோளை காட்டிவிட்டு, தமிழில் அதற்கு விளக்கம் அளிக்கும்போது தனக்கு தேவையான வகையில் விளக்கம் அளிக்கிறார். 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதியவைகள்:

முகவுரை, பக்கம் 10 & 11 (யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்):

//கி.மு. 326-ல் கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் இந்தியாவரை தன் படைகளுடன் வந்து போர் புரிந்தார். பல்வேறு நாடுகளின் இலக்கியங்களை அவர் அப்போது சேகரித்தார். தமது நூலகத்தில் அவற்றை பேணிக் காத்திட ஏற்பாடு செய்தார். இவையெல்லாம் வரலாற்று செய்திகள்.  இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford  என்ற ஆசிரியர் தன் புத்தகம் The Story of Faith பக்கம் 159ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

The Church was less hospitable to another movement in the Graeco-Roman world, the movement called Gnosticism. It was one aspect of the Orientalism that was first introduced into Europe through the conquest of the Near East by Alexander the Great. Orientalism seriously influenced Greek thought in Stoicism, an influence later revived in Neo-Platonism. It influenced Judaism next, in those world-renouncing  desert-dwellers, the Essenes, to whom John the Baptist may have belonged. It reached Christianity, under the name of Gnosticism, through certain false teachers of Colossae. There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross.  From the early second century such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians.

இவ்வாறு கடவுள் பற்றியே கீழைத்தேச ஞானம் பல்வேறு தரப்பினருக்கும் சென்று இறுதியாகக் கிறிஸ்தவர்களைச்  சென்றடைந்தது.// formats are mine

திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு பதில்:

இவர் மேலே எழுதிய முதலாவது பத்தியில், தான் எவைகளை வஞ்சனையாக‌ சொல்லவேண்டுமென்று விரும்பினாரோ அதனை வேறு ஒருவரின் பெயரைக்கொண்டு சொல்லியுள்ளார். 

//இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford என்ற ஆசிரியர் தன் புத்தகம் The Story of Faith பக்கம் 159ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.//

செண்பகப்பெருமாள் அவர்களின் வஞ்சக நோக்கம் இந்த வரிகளில் காணப்படுகிறது. கீழை தேசத்து ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஞானமானது பைபிளுக்கு வந்து சேர்ந்தது என்று இவர் உண்மையை மாற்றி சொல்லுகிறார். தன்னுடைய கருத்தை ஆங்கில ஆசிரியர் மீது திணிக்கிறார். இப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால், இவர் மேற்கோள் காட்டிய அந்த ஆங்கில ஆசிரியர் வில்லியம் ஆல்வா கிஃபொர்டு (William Alva Gifford) எழுதிய ஆங்கில வரிகளில், இவர் சொன்ன விவரம் (பைபிளுக்கு வந்து சேர்ந்தது என்ற விவரம்) உள்ளதா என்பதை பார்ப்போம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில வரிகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத‌ நிலையில் செண்பகப்பெருமாள் இருக்கிறார் என்று நினைக்கும் போது அவர் மீது பரிதாபமாக உள்ளது.

கீழை நாடுகளிலிருந்து ன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம்” என்று முதல் பத்தியில் சொல்லிவிட்டு, கடைசி பத்தியில் "கீழைத்தேச ஞானம் பல்வேறு தரப்பினருக்கும் சென்று இறுதியாகக் கிறிஸ்தவர்களைச்  சென்றடைந்தது" என்றுச் சொல்கிறார். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவரது புத்தகத்தை படிப்பவர்கள் புரிந்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணிவிட்டார் போலும் செண்பகப்பெருமாள். "ஒரு விஷயம் பைபிளுக்கு சென்றடைந்தது" என்றுச் சொல்வது வேறு, "அதே விஷயம் கிறிஸ்தவர்களைச் சென்றடைந்தது" என்றுச் சொல்வது வேறு. திரு செண்பகபெருமாள் அவர்களே! எவ்வளவு தான் நஞ்சை நீங்கள் பாலில் கலக்கப்பார்த்தாலும், அதனை வேறுபிரித்துக் காட்டும் அறிவு கிறிஸ்தவர்களுக்கு உண்டு என்பதை மிகவும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். பைபிளுக்கு சென்றடைந்துவிட்டது என்றுச் சொல்லி மக்களை நம்பவைத்துவிட்டால், உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டீர்களா?

இப்போது நாம், அவர் மேற்கோள் காட்டிய ஆங்கில வரிகளில் உள்ள உண்மையை பார்ப்போம்:

a) ஆங்கில மேற்கோளின் முதல் வரி:  புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்காத திருச்சபை:

//The Church was less hospitable to another movement in the Graeco-Roman world, the movement called Gnosticism.//

இந்த வரியில் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்? 

கிறிஸ்துவ திருச்சபையானது வேறு ஒரு இயக்கத்தையோ / கோட்பாட்டையோ (another movement) சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை (less hospitable) என்று சொல்லுகிறார்.  புதிய கோட்பாடுகளை திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுச் சொல்கிறார். “less hospitable” என்ற இரண்டு வார்த்தைகளின் பொருள் என்னவென்று திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ சபை வேறு ஒரு புதிய கோட்பாட்டை அல்லது இயக்கத்தை எதிர்க்கிறது அல்லது அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அது இல்லை என்பதை அந்த ஆசிரியர் சொல்லி இருக்கும் போது, அதனை மாற்றி கீழை தேசத்து ஞானம் பைபிளில் புகுந்துவிட்டது என்று பொய்களை அள்ளி வீசுவது எவ்வளவு முட்டாள்தனம். 

b) சில தவறான போதகர்களால் கிறிஸ்தவத்தை தாக்க முயன்ற நாஸ்டிஸிச‌ம்:

அடுத்தபடியாக, அந்த ஆங்கில மேற்கோளில் கீழ்க்கண்ட வரி முக்கியமானதாக‌ காணப்படுகிறது:

//It reached Christianity, under the name of Gnosticism, through certain false teachers of Colossae.//

சில தவறான போதகர்களால் நாஸ்டிஸிச‌ம் என்ற ஒரு கோட்பாடு கிறிஸ்தவ சபையை நோக்கி வந்தது என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த வரி செண்பகபெருமாளுக்கு புரிந்ததா?  

இந்த வரியில் ஆங்கில ஆசிரியர்: 

  • கிறிஸ்தவ சபை புதிய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது என்று சொல்கிறாரா? இல்லை.
  • கிறிஸ்தவ சபையை நோக்கி வந்த கீழை தேசத்து கோட்பாடுகள், பைபிளுக்குள் சென்றடைந்து விட்டது, பைபிளின் வசனங்களாக  மாறிவிட்டது என்று சொல்கிறாரா? இல்லை அப்படி சொல்லவில்லை? 

இப்படி இருக்கும் போது, செண்பகப்பெருமாளுக்கு மட்டும் ஏன் எதைப் பார்த்தாலும் மஞ்சலாகத் தெரிகின்றது?

அந்த ஆங்கில ஆசிரியரின் கருத்து, செண்பகபெருமாளின் கருத்துக்கு முரணாக இருக்கிறது. அதாவது “certain false teachers” என்று அவர் சொல்வதிலிருந்து, பைபிளின் போதனைகளுக்கு எதிரான தவறான போதனைத் தான் அது என்று ஆசிரியர் வில்லியம் தெள்ளத்தெளிவாக சொல்லவருகிறார்.  இதனை செண்பகப்பெருமாள் அவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனை கவனிக்கக்கூடாது என்று முடிவு செய்து தானே அவர் பொய்யான தகவல்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.  அவரால் இவைகளை எப்படி கவனிக்கமுடியும்? ஒருவேளை செண்பகப்பெருமாளுக்கு ஆங்கிலம் கொஞ்சம் பிரச்சனையோ!

c) இந்த கோட்பாட்டை எதிர்க்கும் புதிய ஏற்பாட்டு வசனங்கள்:

ஆங்கில மேற்கோளின் அடுத்த வரிகள் இவைகள் ஆகும்:

//There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross.//

புதிய ஏற்பாட்டு கால அப்போஸ்தலர்கள் நம்பிக்கொண்டு இருந்த சத்தியத்திற்கு எதிராக வந்த தவறான போதனைகள் பற்றிய எச்சரிப்புச் செய்திகளை புதிய ஏற்பாட்டில் காணமுடியும் என்று ஆசிரியர் வில்லியம் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார். 

There are echoes in the New Testament of disturbances caused by the doctrine”  என்ற சொற்றொடரின் பொருள் செண்பகப்பெருமாள் அவர்களுக்கு புரிந்ததா?  ஆதி கிறிஸ்தவர்கள் (முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்) நம்பிக்கொண்டு இருந்த கோட்பாடுகளுக்கு எதிராக வந்த புதிய கோட்பாடுகளினால் உண்டான பிரச்சனைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறது. அவைகளை எதிர்த்து எச்சரிக்கை செய்கின்றது என்று ஆசிரியர் வில்லியம் கூறுகிறார். 

இதனை மாற்றி செண்பகப்பெருமாள் அவர்கள் "இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம்" என்று பொய் சொல்கிறார். உண்மையில் பைபிளுக்குள் சென்றது என்று வில்லியம் கூறுகின்றாரா? 'சொல்லாதவைகளை எப்படி சொன்னதாக' கற்பனை செய்கிறீர்கள் செண்பகப்பெருமாள் அவர்களே!?!

ஆங்கிலம் தெரிந்தவர்கள், மேற்கண்ட வரிகளை படித்துப் பாருங்கள். பைபிள் அதனை எதிர்க்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். புதிய கோட்பாடுகள் சபைக்குள் வரும் போது சிலர் அதனால் குழப்பமடையும் போது, அதைப் பற்றிய  எச்சரிக்கைகள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று ஆசிரியர் வில்லியம் சொல்லியுள்ளார். இதனை வஞ்சகமாக மாற்றிச் சொல்கிறார் நம்முடைய கீழைத் தேசத்து மதம் சாரா ஆன்மீகத்தைச் சொல்லவந்த ஆன்மீகவாதி திரு செண்பகப்பெருமாள் அவர்கள்.

நாஸ்டிஸிசத்துக்கு எதிரான வசனங்களை இப்போது புதிய ஏற்பாட்டிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.  இவைகளைப் பற்றித் தான் ஆசிரியர் வில்லியம் குறிப்பிட்டு இருந்தார்.

இயேசுவின் சீடர் யோவான் கீழ்கண்டவிதமாக நாஸ்டிஸிசம் என்ற பொய்யான போதகத்தை பற்றி எச்சரித்துள்ளார்.

I யோவான் 2:22-26

22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 23. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 24. ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 26. உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

I யோவான் 4:3

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

பவுலடியாரும் இதைப் பற்றி எச்சரிக்கைச் செய்துள்ளார்:

I தீமோத்தேயு 6: 20-21

20. ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திலும் இயேசு இப்படிப்பட்ட போதனை செய்பவர்களை எச்சரித்துள்ளார்.

வெளி 2:6,15

6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

நற்செய்தி நூல்களில் கூட, “இயேசு மாமிசத்தில் வந்த இறைவன்” என்பதை தெளிவாக யோவான் குறிப்பிடுகிறார்.

யோவான் 1:1-3, 14

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

நாஸ்டிஸிசத்தின் படி, இறைவனாகிய வார்த்தை, மனிதனாக வந்ததை ஏற்பதில்லை, அதனை யோவானின் இந்த வசனம் முழுவதுமாக மறுக்கிறது என்பதை கவனிக்கவும். பொய் உபதேசமாகிய நாஸ்டிஸிச‌த்தின் அடிப்படை கோட்பாட்டை எதிர்க்கின்ற வண்ணமாக புதிய ஏற்பாட்டு வசனங்கள் இருக்கும் போது, 'கீழை தேசத்து ஞானம் பைபிளுக்கு சேர்ந்த விதம்' என்று எப்படி செண்பகப்பெருமாள் சொல்கிறார்?

இப்படிப்பட்ட வசனங்களை திரு செண்பகப்பெருமாள் படித்து இருந்திருப்பார். இருந்தபோதிலும் தம் வஞ்சகமான போதனைகள் மூலமாக பொய்களை பரப்பிக்கொண்டு வருகிறார். மேற்கண்ட வசனங்களில் 'வஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்று சொல்வது, செண்பகப்பெருமாள் போன்றவர்களைப் பற்றித்தான்.

தேவைப்படும் போது அடுத்தடுத்த கட்டுரைகளில், பைபிளின் கருத்துக்கள் எப்படி நாஸ்டிஸசத்திற்கு எதிராக உள்ளன என்பதை காண்போம்.

d) இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இக்கருத்துக்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு ஆதரவு கிடைத்தது:

கடைசியாக, கீழ்கண்ட வரிகளோடு அவருடைய மேற்கோள் முடிகின்றது.

//From the early second century such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians.//

புதிய ஏற்பாடு, முதல் நூற்றாண்டு கடைசிக்குள்  எழுதி முடித்தாகிவிட்டது. இயேசுவின் சீடர்கள் இருந்தபோதே அது முற்றுப்பெற்றுவிட்டது. மேலும், வஞ்சகமான போதனைகள் வரும் என்றும், அவைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றும், அப்படிப்பட்ட போதனைகள் செய்பவரை இயேசு வெறுக்கிறார் என்றும் வெளிப்படுத்தின விசேஷம் தெளிவாக சொல்லியாகிவிட்டது.

இதன் பிறகு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, இந்த போதனையை சிலர் ஏற்கவும் செய்தார்கள் என்று சொல்வதினால் எந்த பயனுமில்லை. நாஸ்டிஸிசம் சொல்லும் போதனையை புதிய எற்பாடு எதிர்க்கிறது என்பதை வசன ஆதாரங்களோடு விளக்கினேன்.   

முடிவுரை:

இதுவரை திரு செண்பகப்பெருமாள் அவர்கள் மேற்கோள் காட்டிய ஆங்கில வரிகளை ஆய்வு செய்தோம். ஆங்கிலத்தில் சில வரிகளை படித்து, தவறாக பொருள் கூறும் இவர் எப்படி ஆய்வாளர் ஆகிவிட்டார் என்று புரியவில்லை.  முக்கியமாக, இவர் மேற்கோள் காட்டிய ஆசிரியர் எதனை சொல்லவந்தாரோ அதற்கு எதிர்மாறாக விளக்கமளிக்கிறார். 

நாஸ்டிஸிசம் என்றுச் சொல்லக்கூடிய "அறிவு நெறிக்கோட்பாடு" பற்றிய அடிப்படை அறிவு இவருக்கு இருந்திருந்தால், பைபிளின் வரிகளுக்கிடையில் இவர் தம் அறிவை தொலைத்து இருந்திருக்கமாட்டார்.

அடுத்தடுத்த கட்டுரையில் இன்னும் இவரது தவறான வரிகளுக்கு பதில்களைக் காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

1) The Story Of The Faith - A Survey Of Christian History For The Undogmatic By William Alva Gilford - https://www.amazon.com/story-faith-Christian-history-undogmatic/dp/B0007I8UVQ

தேதி: 24th July 2019


"செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" - தொடர் பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்