2017 ரமளான் (24) – நிலமெல்லாம் இரத்தம் - இஸ்லாமுக்கு முஹம்மதுவை விட பா. ராகவன் அதிக நன்மையை செய்துள்ளார்கள்

(பாரா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்)

இது என்ன விசித்திர தலைப்பாக இருக்கிறது என்ற சந்தேகம் வருகிறதா? ஆம், பா. ராகவன் அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் தொடரின் 20வது அத்தியாயத்தை படித்தால், இப்படித் தான் நமக்கு தோன்றும். நம்முடைய  அடுத்த சில கட்டுரைகள் இந்த அத்தியாயத்தின் விமர்சனமாக வெளிவரபோகிறது. வாசகர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கி, பாரா அவர்களின் இவ்வத்தியாயத்தை முழுவதுமாக படித்துக் கொள்ளவும்.

பா.ராகவன் - நிலமெல்லாம் இரத்தம்

அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

தொடுப்பு: nilamellam.blogspot.in/2005/01/20.html

1) ஒரு ஹிந்து (பிராமணர்) சொன்னால் உண்மையாக இருக்கும்!

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை மெச்சிக்கொள்ளாத தமிழ் முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள் என்றுச் சொல்லலாம். இணையம் வந்த பிறகு முஸ்லிம்கள் அவரது புத்தகத்தை பாராட்டி தங்கள் தளங்களில் எழுதியுள்ளார்கள். 

அ) மேலே மேற்கோள் காட்டப்பட்ட “நிலமெல்லாம் பிளாக்ஸ்பாட்” தளத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

பா.ராகவனின் குமுதம் ரிப்போர்ட்டர் தொடர் (பாலஸ்தீனம் பிரச்சினை சம்பந்தமான யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவரின் ஆய்வு)

முஸ்லிமல்லாதவரின் ஆய்வு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால், அவரை புகழுவார்கள், அதே ஆய்வு, முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தால், அதே நேர்மையுடன் முஸ்லிம்கள் அவரது ஆய்வை ஏற்றுக்கொள்வார்களா? இஸ்லாமை அவமானப்படுத்திவிட்டான், அவன் சாகவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா?

ஆ) தருல் இஸ்லாம் தளத்தில் -பாராவிற்கு புகழாரம்

நிலமெல்லாம் ரத்தம் - ஒரு விமர்சனம்

பா.ரா. “என்னுரையில்” பாலஸ்தீன் அராபியர்கள் தொடர்ந்து சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டு வந்திருப்பவர்கள், என்று ஆரம்பிக்கிறார். ”நான் ஒரு கிருத்தவனாகவோ, யூதனாகவோ, இஸ்லாமியனாகவோ இல்லை என்பது ஒரு சௌகரியம் தான்” என்று அவரே குறிப்பிட்டிருப்பதனால் இந்த புத்தகம் ஒரு குறிப்பிட்ட சார்பு எடுத்திருப்பதாகத் தோன்றினாலும் அது நியாயத்தின் வெளிப்பாடே என்பதை எந்த நடுநிலை வாசகனும் உணரலாம்.

மேலும், “முத்தரப்பினரும் ஒற்றுமையுடன் அங்கே வாழ்ந்திருக்கமுடியும். அதற்கான சாத்தியங்கள் கலீஃபா உமரின் காலத்திலேயே உருவானது. கிருத்தவர்களுடனான உமரின் அமைதி ஒப்பந்தத்தை இன்று வாசித்தாலும் சிலிர்ப்பு ஏற்படுகிறது. உமருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களில், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுல்தான் சலாவுதீன் அய்யூபியின் காலம் வரையிலும் கூட இதற்கான சாத்தியங்களை இஸ்லாமிய மன்னர்கள் மிக வெளிப்படையாகவே தெரிவித்து வந்திருக்கிறார்கள்” என சிலாகிக்கும் ஆசிரியர் பிரிட்டனின் நயவஞ்சகத்தால் எப்படி வந்தேறிகளான யூதர்கள் மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை வெளியேற்றி நிலத்தை அபகரித்தார்கள் என்பதை மிகவும் அற்புதமாய் விவரிக்கிறார்.

இந்த பிரச்சனையை மேலோட்டமாய் பார்க்காமல், மூன்று மதங்களுக்கும் பொதுவான நபி இப்ராஹீமின் காலத்திலிருந்து தொடங்கியுள்ளது ஆசிரியரின் நேர்மையை பகர்கிறது. மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.

. . .

தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. தொடர்ந்து இனி வரும் பாலஸ்தீன் செய்திகளை முறையாய் அறிந்து உண்மையுணர நிச்சயம் அது உதவும்.

பாரா அவர்கள் ஒரு இந்து என்பதால், இந்த புத்தகம் யூத, [கிறிஸ்தவ] மற்றும் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை பற்றி பேசுவதால், இந்த புத்தகத்தில் நேர்மை இருக்கும் என்று மேற்கண்ட விமர்சனத்தில் அந்த முஸ்லிம் குறிப்பிடுகிறார். ஆனால், யூத/கிறிஸ்தவ/இஸ்லாமிய சரித்திரம் அறிந்த ஒரு நடுநிலையாளர் இப்புத்தகத்தை படித்தால், நிச்சயமாக இது முஸ்லிம்களின் சார்பாக, முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களின் உற்சாகத்தால் எழுதப்பட்ட புத்தகம் என்பதை அறிந்துக் கொள்வார்கள். 

“இந்த புத்தகத்தை நான் படித்துள்ளேனே, நீங்கள் சொல்வது போல, பாரா அவர்கள் இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதியதாக எனக்கு தெரியவில்லையே” என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், இதற்கு  ஒரு காரணமுண்டு. அதாவது, நீங்கள் முஸ்லிமாக இருக்கவேண்டும், அல்லது உங்களுக்கு குறைந்தபட்ச யூத/கிறிஸ்தவ/இஸ்லாமிய சரித்திரம் தெரியாமல் இருந்திருக்கவேண்டும்.

இப்புத்தகத்தின் சில பாராக்களை படிக்கும்போது, பாரா அவர்கள் எழுதியதாக தெரியவில்லை. முஸ்லிம்கள் எழுதிக்கொடுத்ததை இவர் அப்படியே பதித்துள்ளார் என்று தெரிகிறது. முக்கியமாக 20ம் அத்தியாயத்தை நடுநிலையாக ஒரு நபர் படித்தால், அதனை எழுதியவர் ஒரு முஸ்லிம் தான் என்று அடித்துச் சொல்வார். ஏனென்றால், இந்த அத்தியாயத்தில் முஸ்லிம்களின் வாசனை அளவிற்கு அதிகமாகவே அடிக்கிறது. பாரா அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது தெரிந்தவர்கள்  யாராவது இந்த பாராவை படித்தால், எப்போதாவது நீங்கள் பாராவை நேரில் கண்டால் இந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள் – “நிலமெல்லாம் இரத்தம் 20ம் அத்தியாயத்தை யார் எழுதியது?”

2) எப்படி பாரா முஹம்மதுவைவிட பெரிய தொண்டு ஆற்றிவிட்டார்?

குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய விரிவுரைகளிலும், இன்னும் இஸ்லாமிய சரித்திர நூல்களிலும், இஸ்லாம் வாளால் தான் பரவியது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை காணமுடியும். இவைகளை யாரும் மறுக்கமுடியாது.  ஆனால், பாரா அவர்கள் தம்முடைய நிலமெல்லாம் இரத்தத்தில் ஒரு மிகப்பெரிய வெடிகுண்டை முஸ்லிம்கள் மீதே தூக்கிபோடுகிறார். பாரா அவர்கள் கொடுத்த இந்த சுகமான அதிர்ச்சியை முஸ்லிம்களே தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. 

புரியவில்லையா!?! புரியும் படி விளக்குகிறேன். 

இஸ்லாமின் ஆதார நூல்களான குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய விரிவுரைகள் அனைத்தும், முஹம்மது பல யுத்தங்களை புரிந்துள்ளார் என்றுச் சொல்கின்றன. அப்போர்களுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்றும் சொல்கின்றன. அவைகள் நியாயமான காரணங்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், நம்முடைய தமிழ் எழுத்தாளர் பாரா அவர்கள், ஒரு பெரிய இஸ்லாமிய புரட்சியை துவக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.  அதாவது, இந்த நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20வது அத்தியாயத்தில், “முஹம்மது புரிந்த போர்கள் அனைத்தும் வெறும் மூன்று தான்” என்று அடித்துச் சொல்கிறார். இஸ்லாமிய சரித்திரத்தில் இந்த மூன்று போர்கள் தான் பதிக்கப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கைத் தான் சரியானது, இதைவிட அதிக எண்ணிக்கையைச் சொல்கிறவர்கள் மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் ஆவார்கள், அவர்கள் யூதர்கள் ஆவார்கள், அவர்கள் சொல்வது பொய் என்றுச் சொல்கிறார்.  பாராவின் படி, முஹம்மது மூன்றுக்கு மேல் போர் புரிந்துள்ளார் (அது நியாயமான போராக இருந்தாலும் சரி) என்றுச் சொல்பவன் பொய்யனாவான்.

முஸ்லிம்கள் இப்போது ஒரு தர்மசங்கடத்தில் உள்ளார்கள். ஒரு முஸ்லிமல்லாதவர் சொல்லும் இந்த மூன்று போர்கள் என்ற எண்ணிக்கையை எடுத்துக்கொள்வதா? அல்லது குர்-ஆன் ஹதிஸ்கள் மற்றும் இஸ்லாமிய விரிவுரையாளர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதா? ஒருவகையில் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக அல்(ல)வா இவர் எழுதியுள்ளார்? 

முஹம்மது இஸ்லாமுக்காக பல போர்களைச் செய்தார், ஆனால், பாரா அவர்கள் மூன்றே என்றுச் சொல்கிறார்.  யார் இஸ்லாமுக்காக அதிக சேவை செய்தவர் ஆகிறார்கள்? முஹம்மதுவா அல்லது பாராவா? எது எப்படியோ, தற்காலத்தில் இஸ்லாமுக்கு உண்டாகியிருக்கின்ற அவப்பெயர் பாரா அவர்கள் மூலமாக கொஞ்சமாவது துடைக்கப்பட்டால் நல்லது என்ற நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 

இந்த தலைப்பு பற்றி பாரா அவர்கள் எழுதிய சில வரிகளை 20ம் அத்தியாயத்திலிருந்து பார்ப்போம். 

பாரா அவர்கள் எழுதியவை:

. . . மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

இதுவரை காட்டிய மேற்கோள்கள் போதும் என்று எண்ணுகின்றேன்.  பாரா அவர்களின் முழு கட்டுரையையும் மேலே கொடுத்துள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

பாரா அவர்களின் படி மொத்தச் சுருக்கம்:

அ) மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆய்வு தவறானவது, அவர்கள் ஆய்வு என்ற பெயரில் இஸ்லாம் மீது பொய்களைச் சொல்லியுள்ளார்கள். அவர்கள் யூதர்கள் அதனால் இஸ்லாம் மீது பொய்களை கூறுகிறார்கள். (பாராவின் வரிகள் -  மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.)

ஆ) முத்தான மூன்று போர்களை மட்டுமே முஹம்மது புரிந்துள்ளார். அதுவும் நியாயமான காரணங்களுக்காக மட்டுமே போர் புரிந்தார்.

இ) மூன்று போர்கள் என்றுச் சொல்லும் சரித்திரம் தான் உண்மை, மற்றவையெல்லாம் பொய்யான நூல்கள்.

ஈ) ”பாவம் இஸ்லாம்”, அது வாளால் பரப்பப்பட்டது என்றுச் சொல்வது பொய்.

பாராவின் படி, இஸ்லாமின் உண்மையான சரித்திரத்தின்படி, முஹம்மது மூன்றே யுத்தங்களை மட்டுமே புரிந்துள்ளார் என்பதாகும். இப்போது சொல்லுங்கள்? யார் இஸ்லாமுக்கு அதிக நன்மை செய்தவர்கள்? பல  போர்களை புரிந்த முஹம்மதுவா? அல்லது வெறும் மூன்று யுத்தங்கள் தான் என்றுச் சொல்லும் பாராவா?

3) அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்?

முஹம்மது புரிந்தது மூன்றே போர்கள் என்று  பாராவே சொல்லிவிட்டார், இனி நாம் சும்மா இருக்கமுடியுமா? அவர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்கவேண்டுமல்லவா? இராமனின் மனைவியாக இருந்தாலும், அக்னி பரிட்சை சீதைக்கு தப்பவில்லையே! பாராவிற்கு ஒரு அக்கினி பரிட்சை வைக்கவேண்டாமா?

முஹம்மது பல போர்களை புரிந்தார் என்று ஒரு பக்கம் இஸ்லாம் சொல்கிறது. ”இல்லை, அவர் மூன்றே போர்கள் தான் புரிந்தார்” என்று பாரா சொல்கிறார். நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய விரிவுரைகள், ஆரம்பகால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்து எத்தனை யுத்தங்களை முஹம்மது புரிந்தார் என்பதை பட்டியலிடப்போகிறோம்.

பாரா அவர்கள் கருதியதுபோல, மேற்கத்திய அறிஞர்களின் ஆய்வுகளை நாம் மேற்கோள் காட்டமாட்டோம் ஏனென்றால், அவர்கள் யூதர்கள் மேலும் சிறும்பான்மை கிறிஸ்தவர்கள் எனவே அவர்கள் பொய் சொல்லவர்கள்.  

இந்த தொடர் பதில் கட்டுரைகளுக்கு பிறகு, உண்மையுள்ள முஸ்லிம், பாரா அவர்கள் இந்த அத்தியாயத்தில் எழுதியவைகள் பொய்யாகும் என்றுச் சொல்லுவான் என்பது நிச்சயம். அப்படி அவன் செய்யவில்லையென்றால், அல்லாஹ் குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் சொன்னது பொய் என்று அவன் ஒப்புக்கொள்கிறான் என்று அர்த்தம்.

பாராவா அல்லது பரமனா? முஸ்லிம்கள் முடிவு செய்வார்கள்


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்