2015 ரமளான் கடிதம் 7

அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே ”2015ம் ஆண்டின் ரமளான் மாதத்தில்” கடித உரையாடல்கள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த கடிதத்தில், முதலாவது உமரின் தம்பி கடிதம் எழுதுகிறார், அதன் பின்பாக உமர் அவருக்கு பதிலைத் தருகிறார். 


அன்புள்ள அண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதங்களை படிக்கும் போது, எனக்கு இரத்தம் கொதிக்கிறது. இஸ்லாமை பற்றி நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஆரோக்கியமானவைகளாக இல்லை.  உங்கள் முந்தைய  கடிதத்தை படித்தேன், அதில் அலி அவர்கள் பற்றி நீங்கள் தரக்குறைவாக எழுதியுள்ளீர்கள்.

1) அவருக்கு பண ஆசை அதிகம் என்று எழுதியுள்ளீர்கள். மனைவிக்கு அறிவுரை கூறாதவர் என்று குறைகூறியுள்ளீர்கள்.

2) அலி தன் தவறை உணர்ந்து, அபூ பக்கரிடம் ஒப்புறவான விஷயத்தை மட்டும் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்.  அவரது பிழைகளை எடுத்துக் காட்டிவிட்டு, அவர் மறுபடியும் ஒப்புறவான விஷயத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டீர்கள்.  இதனை நீங்கள் மேற்கோள் காட்டிய புகாரி ஹதீஸிலிருந்து அறிந்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஹதீஸீன் கடைசி பகுதியை நீங்கள் வேண்டுமென்றே மேற்கோள் காட்டாமலேயே விட்டுவிட்டீர்கள். இதிலிருந்து உங்கள் உள்நோக்கம் தெரிகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

3) மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான், அவன் திருந்திவிட்டால், அவனின் முந்தையை தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்குத் தெரியவில்லையா? 

ஏன் நீங்கள் புகாரி ஹதீஸ் 4240 & 4241ஐ முழுவதுமாக பதிக்கவில்லை என்பதை எனக்கு சொல்லுங்கள்? நீங்கள் மறைத்த ஹதீஸை நான் உங்களுக்காக பதிக்கிறேன், படித்துப் பாருங்கள். இதற்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உங்களிடன் கடிதத்திற்காக நான் காத்திருப்பேன்.

புகாரி 4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

. . . . . . . . . ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அலீ(ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்" என்று கூறி அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்-ரலி - அவர்களுடன்) உமர்(ரலி) வருவதை அலீ(ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும. அப்போது உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)" என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்" என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல்விட்டு விடவுமில்லை" என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும" என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்" என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.  Book :64

இப்படிக்கு, 

உங்கள் தம்பி

சௌதி அரேபியா.

தேதி: 24 ஜூன் 2015


2015 ரமளான் கடிதம் 7

அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

அன்பான தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். 

உன் கடிதத்தை படித்து மகிழ்ந்தேன். உன் ஆர்வத்தையும் ஆய்வையும் கண்டேன். 

நீ கேட்ட கேள்விகளுக்கு நான் கட்டாயம் பதில் சொல்வேன். 

உன் முதல் கேள்வி: அலி அவர்கள்  “பண ஆசை” உள்ளவர் என்று நான் எழுதியது பற்றியதாகும். மேலும் பண விஷயத்தில், பெரியவர்களுக்கு தர வேண்டிய மதிப்பு   மரியாதை விஷயத்தில் மனைவிக்கு அறிவுரைச் சொல்லாதவர் என்றும் நான் எழுதியிருந்தேன். 

தம்பி, என் விமர்சனத்திற்கு ஆதாரமாக நான் ஆதாரங்களை காட்டி எழுதினேன். இப்போது அதனை மறுக்கும் நிலையில் நீ இருந்தால்,  அதற்கான ஆதாரங்களைத் தருவது உன் கடமையாகும். அதற்கும் என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? நான் மேற்கோள் காட்டிய ஹதீஸிலிருந்து, அலியும், ஃபாத்திமாவும் பண ஆசையே இல்லாதவர்கள் என்று உன்னால் நிருபிக்கமுடியுமா?  முயற்சி எடுத்துப்பார். 

இரண்டாவது விமர்சனம்: நான் ஏன் புகாரி ஹதீஸ்கள் 4240 & 4241  எண்களில் வரும்  கடைசி பகுதியை முந்தைய கடிதத்தில் பதிக்கவில்லை என்று கேட்டு இருந்தாய். 

என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு, நீயே பதிலை சொல்லிவிட்டால் எப்படி சொல்?  ஏன் பாதி ஹதீஸை பதித்தீர்கள்? என்று என்னிடம் கேள்வி கேட்டாய், ஆனால், நீயே அதற்கு பதிலையும் சொல்லிவிட்டாய். அதாவது நீயும்  இந்த கடிதத்தில் பாதி ஹதீஸையே பதித்தாய் ஏன்?

கடிதத்திற்கு தேவையான பகுதியை மட்டுமே பதித்தேன், தேவை இல்லாததை ஏன் பதிக்கவேண்டும் என்று எனக்கு நீ பதில் சொல்லக்கூடும். அதே பதில் தான் நானும் கூறுவேன். ஒரு தலைப்பு பற்றி நாம் பேசும்  போது, அந்த விஷயத்தைப் பற்றிய பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டுவோம். தேவையில்லாத ஊர் கதையெல்லாம் அந்த தலைப்பில் விவாதிக்கமாட்டோம். அதனால், தான் ஃபாத்திமா மற்றும் அலி அவர்களின் பண ஆசை வெளிப்படும் “ஹதீஸ் பகுதியை நான் மேற்கோள் காட்டினேன்”.   இது தான் நான் ஹதிஸின் முதல் பகுதியை பதித்ததற்கான முதலாவது காரணம். 

இரண்டாவது காரணம் என்னவென்றால்,  ஒரு கடிதத்தில் ஒரு தலைப்பு பற்றியே நான் எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொரு கடிதத்திற்கும் தனித்தனி தலைப்புகள் வைப்பதினால், அதைப் பற்றிய விவரங்களை மட்டுமே பதித்தேன். ஃபாத்திமா அவர்கள் மரித்த பிறகு, அலி  அபூ பக்கரிடம் வந்து நடித்த நடிப்பை ஒரு புதிய கடிதமாக எழுத நான் எண்ணியிருந்தேன். ஆகையால், அதனை நான் முந்தைய கடிதங்களில் பதிக்கவில்லை.  இப்போது அதற்கான சமயம் வந்தபடியால், இந்த கடிதத்தில் அதைப் பற்றி எழுதுகிறேன்.

புகாரி 4240/4241ம் ஹதீஸ்களின் பிற்பகுதிக்கு, நான் வைத்த பெயர் என்ன தெரியுமா? ”அலி ஒரு சந்தர்ப்பவாதி” என்பதாகும்.

உபதலைப்புக்கள்:

1) ஃபாத்திமாவின் மரணமும், அலியின் மரியாதைக் குறைவும்.

2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்.

3) முடிவுரை: வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.

------------------------

1) ஃபாத்திமாவின் மரணமும், அலியின் மரியாதைக் குறைவும்.

தம்பி நீ பதித்த ஹதீஸை மறுபடியும் நன்றாக படித்துப் பார்.  அதில் முக்கியமான வரியை உனக்காக இங்கு பதிக்கிறேன்.

. . . . ”ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள்.” . . .

ஃபாத்திமா அவர்கள் உயிரோடு இருக்கும் வரையிலும்,  அலி அவர்களுக்கு மக்கள் மரியாதை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.  ஃபாத்திமா மரித்தவுடன், மக்களின் முகங்களில் மாற்றம் வந்தது, மரியாதை குறைந்தது, தனிக்கவனம் குறைந்தது. இதனைக் ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. 

நாம் சென்றுக்கொண்டு இருக்கும் வழி சரியானது தான் என்ற நம்பிக்கை இருந்தால், அதே வழியில் தொடர்ந்து சென்றுக்கொண்டே இருக்கவேண்டும்.  அது தான் நேர்மையானவர்களுக்கும், சத்தியத்தை பின் பற்றுபவர்களுக்கும் அழகு. யார் மரியாதை கொடுததால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன?  என்னை அபூ பக்கர் ஏமாற்றிவிட்டார், இவரால் என் பதவியும் போச்சு,  பணமும் போச்சு  இருந்தாலும், ஆறு மாதங்களாக எடுத்த தீர்மானத்தை மாற்றாமல் இருக்கிறேன் என்றுச் சொன்ன அலி அவர்கள், ஃபாத்திமா மரித்த பிறகு ஏன் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்? மக்கள் செல்வாக்கு இதனை செய்ய அவரை கட்டாயப்படுத்தியுள்ளது.  

2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்

தம்பி, இஸ்லாமிலே நான் அனேக ஆச்சரியங்களைக் கண்டு இருக்கிறேன். முஹம்மதுவிற்கு பரம எதிரியாக இருந்தவர்,  முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றுச் சொன்னவர்,  முஹம்மதுவோடு போர் செய்து, அவரை கொல்லவேண்டும் என்று விரும்பியவர் ஒருவர் இருக்கிறார். இவருக்கு திடீரென்று ஞானம் பிறக்கிறது – எப்போது?   முஹம்மதுவின் கத்தி, அவரின் கழுத்து பக்கத்தில் வரும்போது, திடீரென்று இந்த நபருக்கு  “முஹம்மது நபியாக தென்படுகிறார், அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை மார்க்கம்” என்ற ஞானம் வந்துவிடுகிறது.  முஹம்மதுவிற்கு முன்பு வந்து, நான் கலிமா சொல்லி முஸ்லிமாகிறேன் என்றுச் சொல்வார், இதனை முஹம்மதுவும் ஏற்றுக்கொள்வார். அந்த பரம எதிரிக்கு நல்ல பதவிகளையும் முஹம்மது தருகிறார். நான் யாரைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று உனக்கு தெரிகின்றதா தம்பி?  சிறிது ஆய்வு செய்துப்பார், இந்த பரம எதிரி யார்? அவர் செய்த செயல்கள் என்னென்ன? இந்த பரம எதிரியினால், இஸ்லாம் சுவைத்த கனிகள் என்ன? என்பதை நேரம் வாய்க்கும்போது உனக்கு எழுதுவேன்.

இப்போது அலியின் கதைக்கு வருவோம். 

ஆறு மாத கசப்பு,  கலிஃபாவும் வேண்டாம், அவரது ஆட்சியும் வேண்டாம், அவரோடு விசுவாச பிரமாணமும் வேண்டாம். நான் உட்கார வேண்டிய இடத்தில், அவர் உட்கார்ந்து இருக்கிறார். என் மனைவி கரேக்ட், நானும் கரேக்ட். இது தான் அலியின் நிலைப்பாடு.  இந்த நிலைப்பாட்டில் அலி ஆறுமாதங்கள் இருந்தார். இன்னும் இருந்திருப்பார், ஆனால், ஃபாத்திமா மரித்துவிடுகிறார்கள். 

மனைவி மரித்தவுடன், மக்களிடத்தில் தன் செல்வாக்கு குறைந்தவுடன், திடீரென்று போதிமரத்தின் ஞானம் இவருக்கு பிறக்கிறது. நான் தவறு செய்துவிட்டேனா?  முதலில் பதவி போச்சு, அடுத்தபடியாக பணமும் போச்சு, இப்போது மனைவியும் போயாச்சு, போதாகுறைக்கு, இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் போலிருக்கே! என்ன செய்வது என்று சிந்தித்தார் அலி.  

முஹம்மதுவிற்கு அடிக்கடி வந்து வெளிப்பாடுகளை கொடுத்த ஜிப்ராயீல் தூதன், மருமகனுக்கு வெளிப்பாடுகளை தர வரவில்லை. கனவிலே மாமனார் வந்து அபூ பக்கரிடம் ஒப்புறவாகிவிடு என்றுச் சொல்லவில்லை.  தெருவிலே மக்கள் காட்டிய மரியாதை (த்குறைவு) தான் அலியை மாற்றியுள்ளது. 

  • நான் சென்று அபூ பக்கரிடம் சமரசம் செய்துக்கொள்ளட்டுமா?
  • அபூ பக்கர் நமக்கு செய்த துரோகத்தை மறந்துவிட்டு, ஏன் இப்படி அவரோடு சேர்ந்துவிட்டீர்கள் என்று ஃபாத்திமா கேட்டால் என்ன செய்வது? 
  • ஓ.. ஃபாத்திமா தான் மரித்துவிட்டார்களே! யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்.

 

 

இத்தனை நாட்கள் இந்த ஐடியா வராமல் இருந்ததற்கு பாத்திமா தான் காரணமோ? ஒரு ஐடியா வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது (An idea can change your life).

காரணம் எதுவாக இருந்தாலும்,  இந்த நல்ல சந்தர்ப்பத்தை மட்டும் நழுவ விடக்கூடாது. விட்ட கதையை தொடரவேண்டியது தான்.  முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, புதிய வசனத்தை நமக்கு நாமே இறக்கிக்கொள்வோம்.  நல்ல விஷயங்களை பெறுவதற்கு, முந்தையை விஷயங்களை மறப்பதில் அல்லது மறைப்பதில் தவறில்லை.  அல்லாஹ்வே தன் முந்தைய வசனங்களை இரத்து செய்கிறானே, நான் செய்தால் என்ன? 

இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க, ஒரு இடத்தில் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அலி. 

தம்பி, உன் ஹதீஸின் படி, அவர் அபூ பக்கரை வரச்சொல்கிறார் (பொதுவாக இவர் தானே அபூ பக்கரிடம் செல்லவேண்டும்? ஒரு கலிஃபாவை வரச்சொல்வதா!  நான் யார் இறைத்தூதரின் மருமகனாக்கும்!).

தன் தவறுகளை அறிக்கையிட்டார், நல்ல பிள்ளை என்று பெயரை வாங்கினார். திடீர் திருப்பங்கள் இஸ்லாமுக்கு புதிதல்லவே! அபூ பக்கர் கண்ணீர் மல்கினார். மக்களின் முன்பாக விசுவாச பிரமாணம் செய்யப்படுகின்றது. அலி எதிர்ப்பார்த்தபடியே மக்கள் அவரை அன்புடன் ஏற்றுக்கொண்டனர். மனந்திரும்புகின்ற ஒரு பாவியினிமித்தம், பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்ற பைபிளின் வசனத்திற்கு ஏற்ப, அபூ பக்கரின் தோளோடு தோள் சேர்க்க, அலி எடுத்த இந்த முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது ஒரு சிலரைத் தவிர.  இந்த மனந்திரும்பிய நிகழ்ச்சியினால் துக்கப்பட்டவர்கள் யாராவது இருந்திருப்பார்களா? ஆம், இருந்திருக்கலாம், அதுவும் அபூ பக்கரின் வீட்டில் பிறந்தவர்களுக்கே இது ஒரு துக்ககரமான செய்தியாக இருந்திருக்கலாம். 

3) முடிவுரை:

வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.

தம்பி, நீ மேற்கோள் காட்டிய பகுதிலிருந்து தான் நான் இதுவரை உனக்கு விளக்கினேன். அலியின் செயல் ஒரு சந்தர்ப்பவாத செயலாகும். செய்த தவறை ஒப்புக்கொள்வதை நான் குறை கூறவில்லை, அதனை எப்போதும் நான் மெச்சிக்கொள்வேன். ஆனால், அலி ஏன் இப்படி தன் இதய கதவை திறந்தார்?  என்று சிந்திக்கும் போது,  பணமும், பதவியும், மக்களின் செல்வாக்கும் தான் அலியை நடத்தியுள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம். 

அ) ஃபாத்திமா உயிரோடு இருக்கும்  போது வராத இந்த நல்ல எண்ணம் ஏன் மரித்த பிறகு வந்தது?

ஆ) ஆறு மாதகாலமாக மனைவி சொல்லே மந்திரம் என்பதுபோல மனைவியின் சொற்படி  நடந்துக்கொண்டார்கள். மனைவி மரித்தவுடன், மந்திரம் மாந்திரீகம் ஆகிவிட்டதா?

இ) ஃபாத்திமா மரித்தபிறகு மக்களின் செல்வாக்கு குறைந்த போது, மனைவியின் தீர்மானங்களை மனைவியோடு கூட சேர்த்து மண்ணிலே புதைத்துவிட்டு, புத்துயிர் பெற்றுவிட்டார் அலி. அலிக்கு, பழயவைகள் ஒழிந்துப்போயின, எல்லாம் புதிதாயின.

ஈ) ஒரு வேளை,  அல்லாஹ்வின் அரசாட்சியில், முதன் முதலில் அலி ஃபாத்திமாவை எப்படி சந்திப்பார்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு பேசுவார்?

உ) அலி செய்தது சரியான காரியமானால், அதனை ஃபாத்திமாவிற்கும் சொல்லி இருவராக அபூ பக்கரோடு ஒப்புறவாகியிருந்தால், இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியிருக்குமே!

எ) மனைவி மரித்தபிறகு இப்படி ஒப்புறவாகுதல் என்பது, மனைவிக்குச் செய்யும் துரோகமில்லையா? தனக்கு நல்லபெயர் வேண்டும், தன் மனைவிக்கு மட்டும் தேவையில்லையா?

தம்பி, நாம் பச்சோந்தி என்றுச் சொல்லுவோம் தெரியுமா? சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது என்பது இது தானோ! 

அலியின் இந்த ஒப்புறவாகுதலை நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை, ஆனால், இந்த ஒப்புறவாகுதல்  எதன் காரணமாக இவருக்குள் உண்டானது என்பது தான் ஜீரணித்துக் கொள்ளமுடியாது (எனக்கு இல்லை தம்பி, உனக்குத் தான் ஜீரணமாவது கடினம்). முதலாவது செல்வத்துக்காக வாக்குவாதம் செய்துக்கொண்டாலும்,  அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், வாரிசு என்பதாலும், என்னை கேட்காமல், தலைவரை தெரிவு செய்ததாலும் தான் நான் கோபம் கொண்டேன் என்று பல்டி அடித்தார் அலி. 

நீ உண்மை இஸ்லாமை அறியாமல், அதில் காலை வைத்துவிட்டாய், இப்போது அதிலிருந்து வெளிவருவது சிறிது கடினம் தான் உனக்கு, ஆனால்,  முடியாது என்று சொல்லமாட்டேன்.  முயற்சி திருவினையாக்கும் தம்பி. சிந்தித்துப்பார்.

தம்பி, இன்னும் அலி அவர்கள் பற்றி அறியவேண்டியவைகள், நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக நான் உனக்கு எழுதுவேன்.  இஸ்லாம் ஃபாத்திமாவை மாற்றவில்லை, அலியையும் மாற்றவில்லை,  பண ஆசையும், பதவி ஆசையும் இவர்களை ஆட்டிபடைத்தது.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், அதுவரை உன் மனக்கண்களால் இஸ்லாமை ஆய்வு செய்துப்பார். 

இப்படிக்கு 

உன் அண்ணன்

உமர்

தேதி: 25 ஜூன் 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்