ஏசாயா 29:12ம் வசனத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டா? – ஜாகிர் நாயக் இஸ்லாமுக்கு இழுக்கு

முன்னுரை:

இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மீது நீங்கள் (முஸ்லிம்கள்) வைத்துள்ள மரியாதை குறைந்துவிடும். முஸ்லிம்களால் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என்று கருதப்படும் இவர், ஐந்தாம் வகுப்பு மாணவன் மேடையில் எப்படி தன் அறியாமையை வெளிப்படுத்துவானோ, அதுபோல இவரும் செய்திருப்பது தெரியவரும்.

பைபிளில் முஹம்மது:

பைபிளில் முஹம்மது என்ற தலைப்பில் பல பொய்யான தகவல்களை டாக்டர் ஜாகிர் நாயக் எழுதியுள்ளார், மேலும் வீடியோக்களிலும் அதைப் பற்றி பேசியுள்ளார். பைபிளின் ஏசாயா புத்தகத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று இவர் அவிழ்த்து விட்ட ஒரு பொய்யை இக்கட்டுரையில் காண்போம். இந்த பொய்யினால்  முஹம்மதுவிற்கு இவர் செய்த துரோகத்தையும் காணமுடியும். 

டாக்டர் ஜாகிர் நாயக் எழுதியது:

Muhammad (pbuh) is prophesised in the book of Isaiah:

It is mentioned in the book of Isaiah chapter 29 verse 12:

"And the book is delivered to him that is not learned, saying, Read this, I pray thee: and he saith, I am not learned."

When Archangel Gabrail commanded Muhammad (pbuh) by saying Iqra - "Read", he replied, "I am not learned".

இந்த வீடியோவில் அவர் பேசியதை, முதலாவது நிமிடத்தில் பார்க்கலாம், அதன் பிறகு சாம் ஷமான் மற்றும் டேவிட் உட் கொடுத்த பதிலையும் பார்க்கலாம் - https://www.youtube.com/watch?v=XUeYLckRu0Y

ஜாகிர் நாயக்கிற்கு பதில்:

ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை தன் பேச்சுக்களால் முட்டாள்களாக்கியுள்ளார். இவரைப்போல அரைகுறை மனிதர்களுக்கு பதில் எழுதவும் எனக்கு வெட்கமாக உள்ளது, இருந்தாலும், இவரது முட்டாள்தனத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிவேண்டியதும், முஸ்லிம்களை எச்சரிக்கை செய்வதும் நம் கடமையாகும். 

ஏசாயா 29:12

இப்போது நாம் ஜாகிர் நாயக் அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை காண்போம்:

அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். (ஏசாயா 29:12)

ஜாகிர் நாயக்கின் ஆய்வு:

இந்த இஸ்லாமிய மாமேதையின் ஆய்வின் படி, முதன் முதலாக ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவிடம் “முதல்முறை குர்-ஆன் வசனத்தை ஓது என்று சொன்னபோது, நான் படிக்கத்தெரியாதவன்” என்று  முஹம்மது சொன்ன நிகழ்ச்சியோடு ஏசாயா 29:12ம் வசனத்தை ஒப்பிடுகிறார். மேடைகளில் இவரது ஞானமான! வார்த்தைகளை கேட்கும்  முஸ்லிம்கள் ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். இவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, “நம் இறைத்தூதருக்கு முதன் முதலாக குர்ஆன் வசனம் இறக்கப்பட்டபோது நடைப்பெற்ற உரையாடல், பைபிளின் ஏசாயா புத்தகத்தில் உள்ளதா!? அதுவும் இயேசுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஏசாயா புத்தகத்தில் உள்ளதா!?  என்ன ஒரு ஆச்சரியம்! அதிசயம்!” என்று துள்ளி குதிப்பார்கள். 

ஆனால், உண்மையென்ன? ஏசாயா 29:12 முஹம்மது பற்றிய முன்னறிவிப்பா? 

  1. ஏசாயாவில் (29:12) ஒரு படிக்காதவன் வருகிறான், ஹிரா குகையிலும் ஒரு படிக்காதவர் இருக்கிறார்.
  2. இந்த படிக்காதவனிடம், ஒரு புத்தகம் கொடுக்கப்படுகின்றது, ஹிரா குகையிலும் வசனம் கொடுக்கப்படுகின்றது.
  3. ஏசாயாவில் அவனிடம் படிக்கச்சொல்லப்படுகின்றது, ஹிரா குகையிலும் படிக்கச் சொல்லப்படுகின்றது.
  4. ஏசாயாவில் ‘எனக்கு படிக்கத்தெரியாது என்றுச் சொல்கிறான்’, ஹிரா குகையிலும் ‘எனக்கு படிக்கத்தெரியாது’ என்று முஹம்மது சொல்கிறார்.

முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஏசாயாவில் இருக்கிறது என்பதை நிருபிக்க  இவைகளைக் காட்டிலும் இன்னொரு ஆதாரம் வேண்டுமா? இது தான் நாயக்கின் ஆய்வு. ஆனால், ஏசாயா 29:12ல் வரும் அந்த படிக்காதவன் யார்? என்பதை இந்த மாமேதை ஆய்வு செய்தாரா? படிக்காதவனுக்கு முன்பு ஒரு படித்தவன் வருகிறானே (ஏசாயா 29:11) அவன் யார் என்பதை இந்த மேதை கண்டுபிடித்தாரா? ஏசாயாவில் வரும் அந்த மனிதனோடு முஹம்மதுவை ஒப்பிட்டது சரியா? இப்போது ஏசாயா 29ம் அத்தியாயத்தின் உண்மை அர்தத்தைப் பார்ப்போம், அப்போது தான் ஜாகிர் நாயக்கின் ஆய்வின் இலட்சணம் முஸ்லிம்களுக்கு புரியவரும்.

ஜாகிர் நாயக்கின் அறியமை அரியணை ஏறுகிறது:

தேவன் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்போகும் தண்டனைப் பற்றி ஏசாயா 29ம் அத்தியாயத்தில் பேசுகின்றார்.

  • பெருமையாக பேசும் எருசலேமை தேவன் தண்டிப்பதாகச் சொல்கிறார். எதிரிகளினால் வரும் துன்பங்களை சகிக்கமுடியாமல், எருசலேம் தவிக்கும் என்கிறார் (வசனங்கள் 1-9)
  • நீ பெருமையாக இருந்ததினால், தரிசனங்களை புரிந்துக்கொள்ளும் ஞானத்தை உன்னை விட்டு தூரமாக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார் (வசனம் 10).
  • படிக்கத்தெரிந்தவனுக்கும் தரிசனங்களை புரிந்துக்கொள்ளமுடியாத அளவிற்கு  தேவன் திரையை போட்டு தண்டிப்பார் (வசனம் 11).
  • படிக்கத்தெரியாதவனுக்கு சொல்லவே வேண்டாம், அவனுக்கு ஒன்றுமே புரியாது, எனக்கு படிக்கத்தெரியாது என்று அவன் சொல்லுவான் (வசனம் 12)

ஏன் இப்படிப்பட்ட தண்டனையை இஸ்ரவேலுக்கு தேவன் கொடுப்பதாகச் சொல்கிறார்? அதற்கான பதில், 13-15ம் வசனங்களில் வருகிறது [1].

இஸ்ரவேலர்கள் செய்த பாவங்கள்:

  • உதடுகளினால் தேவனிடம் சேருகிறார்கள், அவர்கள் இருதயம் அவரைவிட்டு தூரமாக இருக்கிறது.
  • அவர்கள் தேவனுக்கு பயப்படுவதில்லை.
  • அவர்கள் தவறுகளை செய்துவிட்டு, யார் நம்மை காண்பார்கள்? என்று பெருமையடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  • இதனால், தேவன் அவர்களின் ஞானத்தையும், விவேகத்தையும் எடுத்துப்போட்டார்.

இதுவரை டாக்டர் ஜாகிர் நாயக்கின் ஆய்வைப் பார்த்தோம், மேலும் ஏசாயா 29ம் அத்தியாயத்தின் பின்னணியை சுருக்கமாகக் கண்டோம். நாயக்கின் படி, முஹம்மது யார் என்பதை இப்போது காண்போம்.

அ) முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர்:

ஏசாயா 29:12ம் வசனத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னபடியினால், ஏசாயா 29ம் அத்தியாயத்தின் படி முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர் ஆவார். ஏசாயா 29ம் அத்தியாயத்தில் தேவன் ஞானிகளின் ஞானத்தையும், விவேகத்தையும் நீக்கிப்போட்டு தண்டிக்கிறார், தரிசனங்களை புரிந்துக்கொள்ளமுடியாத அளவிற்கு அவர்களின் கண்களுக்கு திரையை போடுகின்றார். 

இதன் படி பார்த்தால், நாயக்கின் விளக்கத்தின் படி, தரிசனங்களை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டவர் தான் முஹம்மது. இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா? முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர் என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? ”இல்லை, இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்” என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், ”முஹம்மதுவிற்கு இப்படிப்பட்ட அவப்பெயரை கொண்டுவந்த ஜாகிர் நாயக்கை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்பதை முடிவு செய்யுங்கள்”.

ஆ) முஹம்மதுவின் உதடு அல்லாஹ்விற்கு அருகில், இருதயமோ அல்லாஹ்விற்கு தூரம்:

ஏசாயா 29ம் அத்தியாயத்தில், ஏன் அந்த மக்களை தேவன் தண்டித்தார் என்று பார்க்கும் போது, 13ம் வசனம் இவ்விதமாகச் சொல்வதை காணலாம். ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டிய வசனத்துக்கு (12க்கு) அடுத்த வசனம் தான் இந்த 13ம் வசனம்.

ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

அந்த மனிதனின் உதடு அல்லாஹ்விற்கு அருகில் உள்ளதாம், அவனது இருதயம் அல்லாஹ்வை விட்டு எங்கேயோ தூரமாக இருக்கிறதாம். ஜாகிர் நாயக்கின் விளக்கத்தின் படி, முஹம்மது அல்லாஹ்வை துதித்தது எல்லாம் சும்மா தான், முஹம்மதுவின் உதடுகளில் தான் அல்லாஹ் இருந்துள்ளான், இருதயத்தில் அல்ல. முஹம்மதுவின் இருதயம், அல்லாஹ்வை விட்டு, தூரமாக இருந்துள்ளது. 

முஸ்லிம்கள், ஜாகிர் நாயக்கின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வார்களா? இவரை ஏற்றுக்கொள்பவர்கள் முஹம்மதுவை கேவலப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம். 

இ) முஹம்மதுவின் ஞானம் கெட்டுப்போகும், விவேகம் மறைந்துப்போகும்:

ஏசாயா 29ல் கொடுக்கப்பட்ட இன்னொரு தண்டனை 14ம் வசனத்தில் உள்ளது. 

ஏசாயா 29:14  ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டிய 12ம் வசனத்துக்கு அடுத்தடுத்துள்ள வசனம் இது. இதன் படி, ஜாகிர் நாயக்கின் படி முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது, அவரது விவேகம் மறைந்துப்போயிற்று. 

முஸ்லிம்களே, ஜாகிர் நாயக்கின் விளக்கத்தின் படி, முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது என்றோ, அவரது விவேகம் மறைந்துப்போயிற்று என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? நாயக்கின் மீது நம்பிக்கை வைக்கும் முஸ்லிம்கள், இதனை நம்பித்தானே ஆகவேண்டும்! முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது, அவர் ஒரு விவேகம் இல்லாத மனிதர் என்று முஸ்லிம்கள் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது, ஏனென்றால், முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஏசாயா 29:12 உள்ளதல்லவா! 

முஸ்லிம்களே! ஜாகிர் நாயக்கினால் முஹம்மது எப்படிப்பட்ட அவமானங்களையெல்லாம் சந்திக்கவேண்டியுள்ளது பார்த்தீர்களா? அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம், ”நீங்கள் சிந்தியுங்கள், மற்றவர்கள் உங்களுக்காக சிந்திக்கவிடவேண்டாம்!”. 

ஈ) இரகசியமாக பாவம் செய்து, இதை காண்பவன் யார் என்றுச் சொல்லும் முஹம்மது:

தேவன், தான் தண்டிக்கும் இஸ்ரவேல் மக்களின் ஒவ்வொரு பாவத்தையும் ஒவ்வொன்றாக ஏசாயா 29ம் அத்தியாயத்தில் சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏசாயா 29:!5ம் வசனத்தில் இன்னொரு பாவத்தையும் சுட்டிக்கட்டியுள்ளார்.

ஏசாயா 29:15  தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!

பைபிள்: ‘தம்பி நாயக், ஏசாயா 29:12 இஸ்ரவேல் மக்கள் பற்றியது’ 

நாயக்: ‘இல்லை, இல்லை, இது முஹம்மது பற்றியது’ 

பைபிள்: ‘அப்படியானால், விளைவை அனுபவித்துத்தொலை’ 

இஸ்ரவேல் மக்கள் மறைவிலே பாவம் செய்துவிட்டு, இதை யார் காண்பார்கள்? என்று மார்தட்டுகிறார்கள் என்று பைபிள் சொன்னால், நாயக் போன்றவர்கள் ‘இல்லை, மறைவிலே பாவம் செய்துவிட்டு, இதை யார் காண்பார்கள் என்றுச் சொன்னவர், எங்கள் முஹம்மது’ என்றுச் சொல்கிறார்.

இவைகளை படித்துவிட்டு, கிறிஸ்தவர்கள் ‘ஆமீன், அப்படியே ஆகட்டும்’ என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? ‘ஆமீன் என்றுச் சொல்லப்போகிறார்களா! அல்லது நாயக்கின் விளக்கம் தவறு என்றுச் சொல்லப்போகிறார்களா?’

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

முஸ்லிம்கள் உங்களிடம் வந்து ஏசாயா 29:12ல் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்றுச் சொன்னால், ‘ஆமீன்’ நாங்கள் இதனை ஒப்புக்கொள்கிறோம் என்று அடித்துச் சொல்லுங்கள். 

உ) நாயக் காட்டிய வசனத்தின் அடுத்த வசனத்தை மேற்கோள் காட்டிய இயேசு

நாயக் எவ்வளவு பெரிய இடத்துக்கு உயர்ந்துவிட்டார் பாருங்கள்! 

நாயக் ஏசாயா 29:12ம் வசனத்தை மேற்கோள் காட்டினார், இவ்வசனத்தின் அடுத்த வசனத்தை அதாவது ஏசாயா 29:13ஐ இயேசு மேற்கோள் காட்டினார். உண்மையாகவா! நெசமாக இயேசு மேற்கோள் காட்டினார்!

இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட உட்கார்ந்ததை குற்றம் பிடித்த யூதமத தலைவர்களை இயேசு கடிந்துக்கொண்டார், அப்போது அவர் ‘ஏசாயா 29:13ம்” வசனத்தை மேற்கோள் காட்டினார்,  பார்க்க மாற்கு 7:6-7 மற்றும் மத்தேயு 15:7-9

மாற்கு 7:6  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 

மாற்கு 7:7  மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 

மத்தேயு 15:7  மாயக்காரரே, உங்களைக்குறித்து: 

மத்தேயு 15:8  இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 

மத்தேயு 15:9  மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

ஏசாயா 19:12ல் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று ஜாகிர் நாயக் சொல்கிறார், அப்படியானால், முஹம்மது இரண்டு முறை கடிந்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார் என்று பைபிளிலிருந்து நாம் அறியலாம். முதலாவதாக, தேவன் ஏசாயா 29ம் அத்தியாயத்தில் முஹம்மதுவை கடிந்துக்கொண்டார், இரண்டாவதாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவும் ஏசாயா 29:13ஐ குறிப்பிட்டு கடிந்துக்கொண்டார். இவ்விரண்டு இடங்களிலும் கண்டிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் மக்களும், யுதமத தலைவர்களும் ஆவார்கள்.  திரு ஜாகிர் நாயக் போன்றவர்கள் பைபிளின் வசனங்களின் பின்னணிகளை அறிந்துக்கொள்ளாமல், முழு அத்தியாயத்தையும் படிக்காமல் சுயமாக பொருள் கொடுத்து ஏமாற்றுவதினால் உண்டாகும் விளைவை முஸ்லிம் அறியவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இக்கட்டுரையில் முஹம்மதுவை கேவலப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. ஜாகிர் நாயக் போன்றவர்களின் வஞ்சகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதும், சத்தியத்தின் பக்கம் முஸ்லிம்களை அழைப்பதும், நாயக் போன்றவர்களின் வஞ்சகத்தில் கிறிஸ்தவர்கள் விழாமலிருக்கவும் எடுக்கப்படும் சிறிய முயற்சி தான் இது. 

நாயக் அவர்களிடம் ஒரு கடைசி கேள்வியை கேட்கவேண்டும். ஏசாயா 29:12ல், எனக்கு படிக்கத்தெரியாது என்றுச் சொன்னவர் முஹம்மது என்றால், இவ்வசனத்தின் முந்தைய வசனமான 29:11ல், ”இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது” என்றுச் சொன்னானே, அவன் எந்த தீர்க்கதரிசி? 

ஏசாயா 29:11  ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.

முஸ்லிம்கள், இந்த மேற்கண்ட வசனத்தில் வரும் அந்த நபர் யார் என்று நாயக்கிடம் கேட்டுச் சொல்வார்களா?

முடிவுரை: 

திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஏசாயா 29:12ஐ குறிப்பிட்டு, அதில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உள்ளது என்றுச் சொன்ன கருத்தை நாம் இதுவரை ஆய்வு செய்தோம். முஸ்லிம் அறிஞர்கள் எப்படி பைபிளை கையாள்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்பதை வாசகர்களுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும். இப்படிப்பட்ட பிழையான வாதம் வைக்கும் முஸ்லிம்களுக்கு எப்படி பதில் தரவேண்டும் என்று கிறிஸ்தவர்களும் புரிந்திருக்கும். நாயக் போன்றவர்கள் மேற்கோள் காட்டும் வசனத்தின் முழு அத்தியாயத்தை படித்தாலே போதும், அவர்களின் முகத்திரை தானாக கிழிந்துவிடும். 

இம்மாதத்தில், உலகமெங்கும் இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் கிறிஸ்தவர்களுக்கு என் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துதல்கள். 

அடிக்குறிப்பு:

[1] ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஏசாயா 29:14  ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஏசாயா 29:15  தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!

தேதி: 21, டிசம்பர் 2016


டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்