படமும் பாடமும்: அல்லாஹ் பின்பற்றச் சொன்ன இன்ஜில் எது? குர்‍ஆன் 5:46, 47 ஆய்வு

இந்த சிறிய கட்டுரையில் குர்‍ஆனின் இரண்டு வசனங்களை சுருக்கமாக ஆய்வு செய்வோம். இவ்விரு வசனங்களில் சொல்லப்பட்டவைகளை படமாக வரைந்து அதனை புரிந்துக்கொள்வோம். 

கீழ்கண்ட படத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். ஆம், படத்தையும் படிக்கமுடியும்!

படம் 1: குர்‍ஆன் 5:46,47 - அல்லாஹ் பின்பற்றச் சொன்ன இஞ்ஜில் எது?

(இந்த படத்தை பெரிய அளவில் பார்க்க இங்கு சொடுக்கவும்)

இந்த படத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு குர்‍ஆன் வசனங்கள் இவைகள் குர்‍ஆன் 5:46,47

குர்‍ஆன் 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.

குர்‍ஆன் 5:46, 47 படவிளக்கம்

1) இயேசுவிற்கு இஞ்ஜில் என்ற புத்தகத்தை/செய்தியை அல்லாஹ் கொடுத்ததாக குர்‍ஆன் 5:46 கூறுகின்றது. இது நடந்தது கி.பி. 30 களில், அதாவது முஹம்மதுவிற்கு 550 ஆண்டுகளுக்கு முன்பு. 

2) ஆனால், அல்லாஹ் தனக்கு கொடுத்த இன்ஜிலை இயேசு ஒரு புத்தகமாக எழுதவில்லை, தாம் உயிரோடு இருக்கும் போது தம் சீடர்கள் மூலமாகவும் எழுதிக்கொள்ளவில்லை. இயேசு இன்ஜிலை சீடர்களுக்கு போதித்தார் அவ்வளவு தான். இன்ஜில் என்றால் நற்செய்தி/சுவிசேஷம் என்று பொருள்.

3) இயேசுவிற்கு பிறகு அரவது சீடர்கள், இயேசு கற்றுக்கொடுத்தவைகளை, நான்கு நற்செய்தி நூல்களாகவும், இதர  நூல்களையும் (மொத்தம் 27) கி.பி. முதல் நூற்றாண்டுக்குள் எழுதி முடித்தார்கள். இவைகளை  இயேசுவின் சீடர்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் எழுதினார்கள். இந்த 27 புத்தகங்களின் தொகுப்பை 'புதிய ஏற்பாடு' என்று கிறிஸ்தவ உலகம் அழைக்கிறது.

4) இயேசுவின் சீடர்களுக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு, முஹம்மதுவை தன் நபியாக அல்லாஹ் அனுப்பினான். கி.பி. 610லிருந்து தான் கொடுத்த குர்‍ஆனில், கிறிஸ்தவர்களே, உங்களிடம் இருக்கும் இன்ஜிலை பின்பற்றுங்கள், அப்படி நீங்கள் பின்பற்றவில்லையென்றால் நீங்கள் பாவிகளாக கருதப்படுவீர்கள் என்று வசனத்தை இறக்கினான்.

முஸ்லில்களுக்கு கேள்விகள்:

1) குர்‍ஆன் 5:47ல் அல்லாஹ் குறிப்பிட்ட‌ இன்ஜில் எது?

2) 7ம் நூற்றாண்டில் (கி.பி. 610ல் முஹம்மதுவின் காலத்தில்) வாழ்ந்த கிறிஸ்தவர்கள் (அஹ்லூல் இன்ஜில்)  வைத்திருந்த‌ புதிய ஏற்பாட்டைத் தானே!

3) இது எதனை காட்டுகிறது? வசனம் 5:47யை இறக்கிய‌ போது "கிறிஸ்தவர்களிடம் இருந்த இன்ஜிலைத் தான் அல்லாஹ் இறக்கினான்" என்று பொருள் வருகின்றதல்லவா? அப்படியானால், இயேசுவிற்கு அல்லாஹ் இறக்கிய இன்ஜிலை சீடர்கள் எழுதி வைத்தார்கள்.

4) இயேசுவின் சீடர்களை அல்லாஹ் வெற்றியாளர்களாக ஆக்கியிருக்கின்றான் என்று குர்‍ஆன்ன் 61:14 கூறுகிறது.

61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

5) குர்‍ஆன் 5:47ல் இன்ஜிலை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கிறிஸ்தவர்களுக்கு கண்டிப்பாய் கட்டளையிடுகின்றான், குர்‍ஆன் 61:14ல் இயேசுவின் சீடர்களை வெற்றியாளர்களாக ஆக்கியிருக்கின்றான். இதைத் தான் இன்று கிறிஸ்தவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், தங்களிடமுள்ள இன்ஜிலைக் கொண்டு கிறிஸ்தவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள்(பின்பற்றுகிறார்கள்) மற்றும் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்.

6) குர்‍ஆன் 5:46 மற்றும் 47ம் வசனம் புரிகின்றதா? அல்லது இன்னும் ஏதாவது சந்தேகம் உள்ளதா?


இதர இஸ்லாமிய ’படமும் பாடமும்’ கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்