Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 4: இலக்கண பிழையையே அரபியின் சிறப்பம்சம் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

இந்த தொடருக்கான முந்தைய கட்டுரைகளும் பதில்களும்:

  1. நம் கேள்வி: அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"
  2. பீஜே அவர்களின் பதில்: கிருஸ்துவர்களின் அஹத் ஒரு ஆய்வு கட்டுரைக்கு பிஜே யின் பதில் | நேரலை | 05/07/2021 | PJ
  3. பீஜே அவர்களுக்கு நம்முடைய பரிசு: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு
  4. பீஜே அவர்களுக்கு முதல் பதில்: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 3: அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு!

இக்கட்டுரையின் பின்னணி: குர்‍ஆனின் 112:1வது வசனத்தில் "குல் ஹுவ அல்லாஹு அஹத் (துன்)" என்று வருகிறது. அஹது என்ற வார்த்தைக்கு "ஒன்று" என்று பொருள் அல்ல, "பலரில் ஒன்று" என்று பொருள் என குர்‍ஆன் வசனங்களின் உதவியோடு நிருபித்திருந்தோம்.  அதற்கு பீஜே அவர்கள் பதில்களைக் கொடுத்திருந்தார். நம்முடைய முதல் பதிலில், பீஜே அவர்கள் முன்வைத்த "அஹதுக்கு பன்மையில்லை, அது எண்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற வாதங்களுக்கு" பதில்களைக் கண்டோம்.  இந்த கட்டுரையில், பீஜே அவர்கள் முன்வைத்த‌ மேலும் சில வாதங்களுக்கு பதில்களைக் காண்போம்.

கட்டுரையின் தலைப்புக்கள்:

  1. உலகத்தில் எது ஒன்று மட்டுமே உள்ளதோ, அதை அஹது என்று அழைத்தான் அரபியன் - அப்படியா! யார் அந்த அறிவாளி?
  2. அல்லாஹ் அனைத்து ஜீவன்களை ஜோடியாக படைத்தானா?? இது விஞ்ஞான முரண்
  3. பூமியை, தாஜ்மஹாலை, தஞ்சாவூர் பெரிய கோயிலை அஹத் என்று அழைக்கலாமா?
  4. இஸ்லாமிய அறிஞர் மௌதுதியின் விளக்கம்: அஹது வார்த்தையின் பயன்பாடு – ஓர் இலக்கணப் பிழை
  5. இலக்கணப்பிழையை காண்பித்து, இது அரபி மொழியின் சிறப்பு என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

1) உலகத்தில் எது ஒன்று மட்டுமே உள்ளதோ, அதை அஹது என்று அழைத்தான் அரபியன் - அப்படியா! யார் அந்த அறிவாளி?

இது உண்மையா?

பீஜே அவர்களின் பதில்: 

1. அரபி மொழியில் அஹது வார்த்தையை வைத்திருக்கிறான் என்றால், எது மட்டும் உலகத்தில் ஒன்றே  ஒன்று இருக்கின்றதோ, அதற்கு மட்டும் தான் அஹது, அதனால் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஹது வார்த்தையை அரபி மக்கள் பயன்படுத்தமாட்டார்கள்.

2. அரபி அகராதியில் 'எது ஒன்று மட்டும் தான் இருக்குமோ' அதற்கு தான் அஹது பயன்படுத்தவேண்டும் என்று உள்ளது.

அரேபியர்கள் அஹத் என்ற வார்த்தையை "எது ஒன்று மட்டும் உள்ளதோ அதற்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்று"? பீஜே அவர்களுக்கு எப்படித் தெரியும்?

1. இஸ்லாமுக்கு முன்பாக, அரேபிய நூல்களில் "அஹது என்றால் அல்லாஹ்விற்கு மட்டும் தான் பயன்படுத்தியதாக அவரால் சான்றுகளை காட்டமுடியுமா"?

2. அரபி மொழி "குர்‍ஆன் வருவதற்கு முன்பாக" பல்லாண்டுகாலமாக இருந்துள்ளது, அதன் படி, யாராவது இஸ்லாமுக்கு முன்பாக, பீஜே அவர்கள் சொன்னது போன்று பயன்படுத்தியுள்ளதை காட்டமுடியுமா?

3. "அரபியர்கள்" என்றுச் சொல்லி பீஜே அவர்கள் வாசகர்களை ஏமாற்றப்பார்க்கிறார். குர்‍ஆன் வந்த பிறகு முஸ்லிம்களாக மாறிய அரபியர்கள் "பீஜே அவர்கள் சொன்னது போன்று நம்பலாம், அவர்களுக்கு வேறு வழியில்லை, குர்‍ஆன் செய்யும் இலக்கண பிழையையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும்". ஆனால், இஸ்லாமுக்கு முன்பாக இருந்த அரபியன் தன் நூல்களில் பேச்சு வழக்கத்தில் இப்படி பயன்படுத்தியதாக ஒரு சான்றை பீஜே அவர்களால் காட்டமுடியாது! இதனை சவாலாக அவர் ஏற்றுக்கொண்டு பதில் சொல்லட்டும்.

பீஜே அவர்களின் பதில்: 

3. அல்லாஹு அஹது என்று சொல்லலாம், இஸ்மாயில் அஹது, இப்ராஹிம் அஹது என்றுச் அரபியில் சொல்லமாட்டார்கள்.

அரபி மொழி நன்கு அறிந்தவன், அரபி இலக்கணத்தை நன்கு அறிந்தவன் ஏன் இப்படி சொல்லுவான்? அஹது என்றால் அனேகரில் ஒருவர் என்று பொருள் இருக்கும் போது, "இஸ்மாயில் அஹது, இப்ராஹீம் அஹது" என்று எப்படி சொல்லுவான்? குர்‍ஆனை இறக்கியவன் செய்த இலக்கண பிழையை எப்படி, மற்ற மனிதர்கள் செய்வார்கள்?  எது பிழையாக இருக்கிறதோ, அதையே திருப்பிப்போட்டு, "இப்படி மற்றவர்கள் கூறமுடியுமா?" என்று கெட்பது மடமையானது. அஹது என்ற வார்த்தையின் உண்மை பொருளை அறிந்த எவனும் இப்படி கூறமாட்டான், அது இலக்கண பிழையென்று அவனுக்குத் தெரியும்.

2) அல்லாஹ் அனைத்து ஜீவன்களை ஜோடியாக படைத்தானா? இது விஞ்ஞான முரண்

பீஜே அவர்களின் பதில்: 

4. அல்லாஹ் ஜோடியாக எல்லாவற்றையும் படைத்துவிட்டான், எது ஒன்று மட்டும் இருக்கிறதோ, அது தான் அஹது, இதனால் அல்லாஹ்விற்கு மட்டுமே அஹது பயன்படுத்த இயலும்.

அல்லாஹ் எல்லாவற்றையும் ஜோடியாக படைத்துவிட்டான் என்று பீஜே அவர்கள் சொன்னதே மிகப்பெரிய தவறு.  உலகில் ஆண் பெண் ஜோடியில்லாமல், உயிரினங்களில் இனப்பெருக்கம் நடந்துக்கொண்டு இருக்கின்றன, அனேக ஜீவராசிகள் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் தனிப்பட்ட விதமாக (ஜோடியில்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளன. கீழ்கண்ட தொடுப்பை பார்க்கவும். இது 10வது வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் தெரியும்.

கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual_reproduction)

கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual reproduction) அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். இங்கே தாய், தந்தை என்ற இரு பெற்றோர் இருப்பதில்லை. . . . இதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். 

ஆங்கிலம்: https://en.wikipedia.org/wiki/ 

இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது எது ஒன்று மட்டும் உள்ளதோ அதற்கு மட்டுமே அஹது என்று நாம் அழைக்கமுடியும் என்று பீஜே அவர்கள் சொல்வதினால், கீழ்கண்டவைகள் எத்தனை உள்ளது என்று சொல்லமுடியுமா? இவைகளை அஹது என்று அழைக்கலாம் அல்லவா?

3) பூமியை, தாஜ்மஹாலை, தஞ்சாவூர் பெரிய கோயிலை அஹத் என்று அழைக்கலாமா?

அ) பூமி:

அல்லாஹ் ஒரே ஒரு பூமியைத் தான் படைத்தான், ஆகையால் "பூமி அஹது" என்று சொல்லலாம் அல்லவா?  இறைநம்பிக்கையுள்ள எந்த மனிதனும், இரண்டு பூமிகளை இறைவன் படைத்தான் என்று சொல்லமாட்டான். மனிதன் வாழக்கூடிய வகையில் படைக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி தான். எனவே பூமி அஹது என்றுச் சொல்லலாமா? 

“இல்லை, அல்லாஹ் படைத்தவைகள்” இந்த கணக்கில் வராது என்று முஸ்லிம்கள் வீண் அடம் பிடிக்கக்கூடாது. ஏனென்றால், பீஜே அவர்கள் சொல்லும் போது "அல்லாஹ் ஜோடியாக எல்லாவற்றையும் படைத்துவிட்டான்" என்றுச் சொல்கிறார். எனவே படைக்கப்பட்டவைகளில் தனியாக எது ஒன்று உள்ளதோ, அதனை அஹது என்று அழைக்கமுடியும். பீஜே அவர்களின் லாஜிக்கின் படி, அல்லாஹ்வும் அஹது தான், பூமியும் அஹதுதான். சரி தானே!

ஆ) தாஜ்மஹால், ஈஃபிள் கோபுரம், தஞ்சாவூர் பெரிய கோயில் 

உலகில் எத்தனை தாஜ்மஹால்கள் உள்ளன? எத்தனை ஈஃபிள் கோபுரங்கள் உள்ளன? இன்னும் எத்தனை பெரிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன? தஞ்சாவூர் பெரிய கோயில், போன்று உலகில் எத்தனை உள்ளது? எனவே இவைகளையெல்லாம் "தாஜ்மஹால் அஹது, ஈஃபிள் அஹது" என்று சொல்லலாம் அல்லவா? 

முஸ்லிம்கள் மறுபடியும் பல்டி அடிக்கலாம், எங்க வீட்டிலும் தாஜ்மஹால் சிறிய அளவில் அழகு பொருளாக உள்ளதே என்று. இங்கு கேள்வி உண்மையான தாஜ்மஹால் எத்தனை உள்ளது என்பதுதான், ஒரே ஒன்று தான் உள்ளது. தஞ்சாவூர் கோயில் ஒரே ஒன்று தான் உள்ளது, அது போலவே வேறு ஒன்றை யாராவது கட்ட முயன்றாலும், அது இதற்கு இணையாக முடியாது.  ஏனென்றால், அந்த கோயில் இருக்கின்ற அதே இடத்தில், அதே கற்களைக்கொண்டு வேறு கோயில் கட்டமுடியாது. எனவே தஞ்சாவூர் கோயில் அஹது என்று கூறலாம்.

வாசகர்கள் ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால், 10க்கும் அதிகமான "உலகில் ஒன்றே ஒன்று உள்ளவைகள்" ஞாபகத்தில் வரும்.

4) இஸ்லாமிய அறிஞர் மௌதுதியின் விளக்கம்: அஹது வார்த்தையின் பயன்பாடு ஒரு இலக்கணப் பிழை

பீஜே அவர்களின் பதில்: 

5. அரபி அகராதியில் 'எது ஒன்று மட்டும் தான் இருக்குமோ' அதற்கு தான் அஹது பயன்படுத்தவேண்டும் என்று உள்ளது.

அப்படியா? எந்த அகராதியில்?

இஸ்லாமுக்கு முன்பாக எந்த அகராதியிலிருந்தாவது, இலக்கண புத்தகத்திலிருந்தாவது மேற்கண்ட விவரத்திற்கான சான்றை காட்டமுடியுமா? ஆனால், பீஜே அவர்கள் பொய்யான விவரங்களைச் சொல்லி முஸ்லிம்களையும், மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை என்னால் நிருபிக்கமுடியும்.

இஸ்லாமுக்கு முன் அஹத் வார்த்தையை, இப்படி தப்பு தப்பாக யாருமே பயன்படுத்தியதில்லை:

இஸ்லாமிய அறிஞர் ஸையத் அபுல் அலா மௌதுதி அவர்களின் (1903 – 1979), தஃபிம் அல்குர்‍ஆன் என்ற விளக்கவுரையில், பீஜே அவர்கள் போன்றவர்கள் சொல்லும் பொய்களுக்கு நெத்தியடி விவரத்தை கொடுத்துள்ளார்.

குர்‍ஆன் 112:1ம் வசனத்திற்கும், அஹத் என்ற வார்த்தைக்கும் அவர் கொடுத்த விளக்கத்தை இங்கு தருகிறேன், அதன் தமிழ் சுருக்கத்தையும் தருகிறேன். இவரது விளக்கவுரையை கீழ்கண்ட தொடுப்பில் இணையத்தில் படிக்கலாம்.

இஸ்லாமிய அறிஞர் மௌதுதி அவர்கள் நெத்தியடி பதில்:

Sayyid Abul Ala Maududi - Tafhim al-Qur'an - The Meaning of the Qur'an

Here, the first thing to be understood is the unusual use of ahad in this sentence. Usually this word is either used in the possessive case as yaum ul-ahad (first day of the week), or to indicate total negative as Ma ja a a-ni ahad-un (No one has come to me), or in common questions like Hal `indaka ahad-un (Is there anyone with you?), or in conditional clauses like Inja'a-ka ahad-un (If someone comes to you), or in counting as ahad, ithnan, ahad ashar (one, two, eleven). Apart from these uses, there is no precedent in the pre-Qur'anic Arabic that the mere word ahad might have been used as an adjective for a person or thing. After the revelation of the Qur'an this word has been used only for the Being of Allah, and for no one else. This extraordinary use by itself shows that being single, unique and matchless is a fundamental attribute of Allah; no one else in the world is qualified with this quality: He is One, He has no equal.

Abul Ala Maududi at Wikipedia - en.wikipedia.org/wiki/Abul_A%27la_Maududi

இவரைப் பற்றிய ஒரு தமிழ் கட்டுரை: www.meipporul.in/maulana-abul-ala-maudoodi-an-introduction/  - மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

மௌதுதி அவர்களின் மேற்கண்ட விளக்கவுரையின் தமிழ் சுருக்கம்:

இந்த வாக்கியத்தில், "அஹத்" என்ற வார்த்தை வழக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். பொதுவாக, இந்த "அஹத்" என்ற வார்த்தை கீழ்கண்ட ஒருவகையில் பயன்படுத்தப்படும்:

1) உடைமை வாக்கியமாக "யௌம் அல் அஹத்" (வாரத்தின் முதல் நாள் - ஞாயிறு) என்று வரும்.

அல்லது

2) எதிர்மறை வாக்கியமாக வரும்: ம ஜ அனி அஹதுன் (என்னிடம் யாரும் வரவில்லை)

அல்லது

3) பொதுவான கேள்வியாக வரும்: ஹல் இந்தகா அஹதுன் (உன்னுடன் யாராவது இருக்கிறார்களா?)

அல்லது

4) நிபந்தனை கேள்வியாக வரும்: இன்ஜ அக அஹதுன் (யாராவது உன்னுடன் வந்தால்?)

அல்லது

5) எண்ணும் போது வரும்: அஹத், இத்னான், அஹத் அஷர் (ஒன்று, இரண்டு, பதினொன்று..)

மேற்கண்ட வகையில் அஹத் என்ற வார்த்தை வருமே தவிர, குர்‍ஆனுக்கு(pre-Qur'anic Arabic) முன்பான காலத்தில் அரேபிய மொழியில், குர்‍ஆன் 112:1ல் சொல்லப்பட்டது போன்று "அஹத்" என்ற வார்த்தை ஒரு நபருக்கோ, ஒரு பொருளுக்கோ உரிச்சொல்லாக வராது. குர்‍ஆன் வந்த பிறகு, இந்த வார்த்தை, அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, வேறு யாருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. குர்‍ஆனில் வந்த இந்த வழக்கத்திற்கு மாறான இவ்வார்த்தையின் பயன்பாடு, நமக்கு எதை காட்டுகிறதென்றால், அல்லாஹ் ஏகன், தனித்தவன் என்பதைக் காட்டுகிறது, மேலும், அவனுக்கு இணையாக உலகில் யாருமே இல்லை என்பதைக் காட்டுகிறது, அவர் ஒருவன், அவனுக்கு இணை யாருமே இல்லை.

குர்‍ஆனின் இலக்கணப் பிழை:

மௌதுதி அவர்களின் வரிகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் படியுங்கள். அவரது இந்த விளக்கவுரை உருது மொழியில் உள்ளது, அப்புத்தகம் உள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம். 

இப்போதாவது புரிகின்றதா? பீஜே அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியுள்ளார் என்று? 

1. அஹத் வார்த்தை "எண்களுக்கு பயன்படுத்தமாட்டார்கள்" என்று பீஜே காரசாரமாக வாய்க்கு வந்தபடி அடித்துவிட்டார், ஆனால், மௌதுதி அவர்கள் பீஜேயின் முகத்தில் கரியை பூசிவிட்டார்.

2. அகராதிகளில் "அஹத்" என்ற வார்த்தை அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பொய் கூறினார் பீஜே,  ஆனால் மௌதுதியோ, இஸ்லாமுக்கு முன்பான காலத்தில் "இப்படி யாராவது பயன்படுத்தினால், அது இலக்கணத்தின்படி பிழை", இப்படிப்பட்ட பயன்பாடு இவ்வார்த்தைக்கு இருந்ததில்லை என்று நெத்தியடி அடித்தார்.

3. எந்த வார்த்தை இலக்கண பிழையாக குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்டு இருந்ததோ, வேறு வழியில்லாமல், அவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் முஸ்லிம்கள். அல்லாஹ் குர்‍ஆனில் இறக்கியதில் இலக்கண பிழையுள்ளது என்றுச் சொல்லும் தைரியம் எந்த முஸ்லிமுக்கு உள்ளது? எனவே, இவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு மட்டுமே இனி பயன்படுத்துவோம் என்று ஒரு சப்பை கட்டை கட்டிவிட்டார்கள் முஸ்லிம்கள்.

4. இது மட்டுமல்லாமல், எது ஒன்று மட்டும் உள்ளதோ, அதற்கு அஹத் பயன்படுத்தலாம் என்று பீஜே அவர்கள் சொன்ன பொய்கள் அனைத்தும் இப்போது தவிடு பொடியாகிவிட்டது. ஒருவேளை உலகில் ஒன்றே ஒன்று இருக்கும் ஒரு பொருளுக்கு அஹத் வார்த்தையை பயன்படுத்தி ஒரு மாணவன் எழுதினால், 'இலக்கண பிழையாக' எழுதியுள்ளான் என்பதால் அரபி ஆசிரியர் அந்த பையனுக்கு மதிப்பெண் கொடுக்கமாட்டார்.

5. மௌதுதி போன்ற அறிஞர்கள் கூட ஒரு பக்கம், குர்‍ஆனில் உள்ள பிழையை "பிழை" என்று அழைக்காமல், "வழக்கத்திற்கு மாறாக இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று மறைமுகமாக குர்‍ஆனின் பிழையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்கள். அதே நேரத்தில், குர்‍ஆனில் அவ்வார்த்தை தவறாக வந்துவிட்டதால், அதற்கு ஒரு சப்பைக் காட்டு கட்டி, இனி இவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று சொல்லிவிடுகின்றனர்.

6. குர்‍ஆனுக்கு முன்பான காலத்தில் "அஹத்" வார்த்தையை அரபியர்கள் இப்படி பயன்படுத்தவில்லை என்று பீஜே அவர்கள் சொல்லவில்லை (அவர் சொல்லமாட்டார்) மேலும், "அரபியர்கள்", "அகராதி" என்ற வார்த்தைகளை பொதுவாக‌ பயன்படுத்தி வாசகர்களை ஏமாற்றப்பார்த்தார். குர்‍ஆனுக்கு முன்பாக இவ்வார்த்தையின் இலக்கணம் இப்படி இருந்தது, குர்‍ஆன் வந்த பிறகு அரபி இலக்கணம் மாறிவிட்டது (எங்கள் வசதிக்காக மாற்றிக்கொண்டோம்!) என்று பீஜே அவர்கள் நேர்மையான முறையில் சொல்லியிருக்கவேண்டும். மௌதுதி போன்ற அறிஞர்களிடம் இருந்த நேர்மை இவரிடம் இல்லை. யார் இதனை சரி பார்க்கப்போகிறார்கள்? என்ற தைரியம் இவருக்கு! குர்‍ஆனையும் அல்லாஹ்வையும் உயர்த்திப்பேசிவிட்டால் போதும், முஸ்லிம்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்றுச் சொல்லி மெய்மறந்துவிடுவார்கள், இவர் சொல்வதையெல்லாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.  குர்‍ஆனில் அல்லாஹ் எத்தனை முறை "இவர்கள் சிந்திக்கமாட்டார்களா?" என்று கேள்வி எழுப்பினாலும், மற்றவர்கள் சிந்திக்கிறார்களே தவிர முஸ்லிம்கள் சிந்தித்து கேள்வி கேட்பதாக தெரியவில்லை. இதுவே பீஜே போன்ற முஸ்லிம் அறிஞர்களின் வலிமையாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் அறியாமையே முஸ்லிம் அறிஞர்களின் ஆயுதமாக மாறிவிட்டது.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, பீஜே அவர்கள் கட்டிய கற்பனை மாளிகை, மன்னிக்கவும், பொய் மாளிகை, இப்போது மாயமாகிவிட்டது.

இதனை முஸ்லிம் வாசகர்கள் அறிவார்களா? பீஜே போன்றவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி "அல்ஹம்து லில்லாஹ்" என்றும், இஸ்லாம் வென்றுவிட்டதென்றும் பெருமை அடித்துக்கொள்கிறார்கள், முஸ்லிம்களே இஸ்லாம் வெல்லவில்லை, இஸ்லாம் வெந்துக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

5) இலக்கணப்பிழையை காண்பித்து, இது அரபி மொழியின் சிறப்பு என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

பீஜே அவர்களின் பதில்: 

6. எந்த புத்தகத்திலும், அரபியில் பேசும் போதும், ஒரு பொருளைக் காட்டி, உதாரணத்திற்கு கம்பியூட்டர் மௌஸைக் காட்டி, “வாஹிது மௌஸ்” (இது ஒரு மௌஸ்) என்று சொல்லலாம், ஆனால் “அஹது மௌஸ்” என்று சொல்லமுடியாது, இது தவறு. 

7. வாஹித், அஹது பற்றி அரபியர்கள்  விளங்கியும் வைத்திருந்தார்கள், இஸ்லாமிய வரலாற்றில் ஆதாரம் உள்ளது. 

பீஜே அவர்களே! இதைத் தான் அரபி இலக்கணமும் சொல்கிறது, கம்பியூட்டர் மௌஸுக்கு மட்டுமல்ல, உலகில் யாருக்கும் சரி, அஹதை பயன்படுத்தக்கூடாது. அல்லாஹ்விற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தான் இலக்கணம் சொல்கிறது, குர்‍ஆனில் இந்த பிழை வந்த பிறகு, முஸ்லிம்கள்  குர்‍ஆனை திருத்துவதை விட்டுவிட்டு, அரபி இலக்கணத்தை திருத்தி எழுதி வைத்துக்கொண்டார்கள். இது தான் இஸ்லாமில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

"இஸ்லாமிய வரலாற்றில் அதாவது கி.பி. 632க்குப் பிறகு" சான்றுகள்  இருக்கும் ஏனென்றால், குர்‍ஆனின் இலக்கண பிழைக்கு பிறகு "இஸ்லாமிய வரலாறு" எழுதப்பட்டதால், சான்றுகள் இருக்கலாம், ஆனால், அரபி மொழி உண்டான காலமுதல் அப்படி இல்லை. இஸ்லாமுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அரபி மொழி இருந்துள்ளது என்பது தான் அரபி மொழி வரலாறு.

பீஜே அவர்களின் பதில்: 

8. அரபி மொழியில் அஹது வார்த்தையை உடன்பாடு சொல்லாக பயன்படுத்தவே மாட்டார்கள்.

பீஜே அவர்களே! நீங்கள் சொல்வது உண்மை தான். இதைத் தான் அரபு இலக்கணமும், முஸ்லிம் அறிஞர்களும் சொல்கிறார்கள். உண்மை இப்படி இருக்கும் போது, "இலக்கணத்திற்கு மாறாக ஏன் குர்‍ஆன் பிழை செய்துள்ளது"? என்பது தாம் நம்முடைய கேள்வி.

உங்களுடைய விளக்கம் தான் எங்களுடைய கேள்வி, அரபு இலக்கணத்தில் உடன்பாடாக வராத ஒரு வார்த்தையை ஏன் அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லியுள்ளான்?  இதன் படி பார்த்தால் குர்‍ஆனில் மனித கைகள் விலையாடியுள்ளன என்று சொல்லலாம் அல்லவா? ஒரு சிறந்த இலக்கிய நயமிக்க நூல் என்று பெருமைப்பாராட்டக்கூடிய புத்தகத்தில் எப்படி இலக்கண பிழைகள் வரும்?  மேலும் இந்த ஒரு பிழை மட்டுமல்ல, இன்னும் அனேக இலக்கண பிழைகள் குர்‍ஆனில்  உள்ளன, அவைகளை தேவைப்படும் போது கட்டுரைகளாக காண்போம்.

முடிவுரை:

இந்த கட்டுரையில் பீஜே அவர்களின் பதிலுக்கு மறுப்பைக் கண்டோம். அரபி மொழியின் இலக்கணத்திற்கு முரணாக இருந்த அஹத் என்ற வார்த்தையின் பிரயோகத்தை, அரபி மொழியின் ஒரு சிறப்பான அங்கம் என்ற வகையில் பொய்களை சொன்னார் பீஜே. இஸ்லாமிய அறிஞர் மௌதுதி போன்றவர்களின் மேற்கோள்களைக் கொண்டு பீஜே அவர்களின் பொய்யான கூற்று வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சுருக்கம்:

  1. குர்‍ஆன் 112:1ம் வசனத்தில் அஹத் வார்த்தை இலக்கண பிழையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. இதனை முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
  3. ஆனால், குர்‍ஆனின் பிழையை சரி செய்வதற்கு பதிலாக, அகராதிகளில் இதையும் ஒரு விதிவிளக்கு என்றுச் சொல்லி, இஸ்லாமுக்கு பிறகு சேர்த்துவிட்டார்கள்.

பீஜே அவர்களின் இதர கருத்துக்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் காண்போம்.

குர்‍ஆனின் இதர (இலக்கணப்)பிழைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

  1. குர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை: "நாங்கள் வெறும் இறைத்தூதர் தான்"
  2. குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்
  3. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

தேதி: ஜூலை 16, 2021


பீஜே மறுப்புக் கட்டுரைகள்

உமரின் பக்கம்